கேன்சல்? உதயநிதி சொன்ன வார்த்தை.. அத்தனை நெருக்கடியை அசராமல் சமாளிச்சாரே.. வியக்கும் உடன்பிறப்புகள்!
சென்னை : திடீரென பிளான் மாற்றப்பட்டு, உதயநிதி ஸ்டாலினை பசும்பொன் செல்லுமாறு கூறிய நிலையிலும், தான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டே பசும்பொன் கிளம்புவேன் எனக் கூறி, அத்தனையிலும் பங்கேற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் திட்டத்தை ரத்து செய்து விடலாம் என உதயநிதியிடம் சொல்லியும், "நிச்சயம் வருவதாகச் சொல்லிவிட்டேன், தொண்டர்களும் காத்திருப்பார்கள், தலையைக் காட்டியதும் கிளம்பி விடலாம்" எனக் கூறி அதன்படியே பங்கேற்றுவிட்டே பசும்பொன் சென்று திரும்பியுள்ளார் உதயநிதி.
அவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும், கட்சியினரின் மனம் நோகக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் எண்ணியதைக் கூறி வியக்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.

தீவிர கட்சிப்பணி
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், 2019 லோக்சபா தேர்தல் முதல் தீவிரமாக கட்சிப் பணி ஆற்றி வருகிறார். திமுக இளைஞரணி சார்பில் நடைபெறும் கூட்டங்கள், அமைச்சர்கள் அழைக்கும் நிகழ்ச்சிகள் என தட்டாமல் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பேசி வருகிறார். திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகள் தமிழகம் முழுவதும் சரியான முறையில் நடத்தப்பட்டு வருவதையும் உறுதி செய்து வருகிறார்.

3 நாட்கள்
இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றார் உதயநிதி ஸ்டாலின். 28ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்ற உதயநிதி ஸ்டாலின், 29ஆம் தேதி நிறைய கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டி இருந்தது. காலை முதல் மாலை வரை சுமார் 10 நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டாராம். அன்று முழுவதும் பயணம், நிகழ்ச்சிகள் என இருந்தாலும் உற்சாகமாகவே நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் உதயநிதி.

ஸ்டாலின் விருப்பம்
அன்று மாலை தான், முதல்வர் ஸ்டாலின் உடல் நலக் குறைவால் பசும்பொன்னுக்குச் செல்ல இயலாததால், நாளை பசும்பொன்னுக்கு செல்ல வேண்டும் என உதயநிதிக்கு தகவல் கிடைத்துள்ளது. முதல்வர் செல்லவிருந்த நிலையில் எதிர்பாராவிதமாக திடீரென தடைபட்டதால், மூத்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டாலும், உதயநிதி சென்றால் நல்லது என முதல்வர் ஸ்டாலினே தனிப்பட்ட முறையில் விரும்பியதால் உதயநிதி ஸ்டாலினும் பசும்பொன் செல்லத் தயாராகியுள்ளார்.

2 முக்கிய நிகழ்ச்சிகள்
அதேநேரம், அடுத்த நாள், கள்ளக்குறிச்சியில் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனின் மகன் பர்னாலா திருமண விழாவிலும் பங்கேற்க இருந்தார் உதயநிதி ஸ்டாலின். பசும்பொன் செல்லவேண்டி இருப்பதால், இந்த நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடலாம் என நிர்வாகிகள் உதயநிதியிடம் கூறியுள்ளனர்.

வாக்கு கொடுத்துட்டேன்
ஆனால், அதை ஏற்காத உதயநிதி ஸ்டாலின், நிச்சயம் வருவதாகச் சொல்லிவிட்டேன். அவர்களும் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பார்கள். திடீரென அங்கு செல்லவில்லை என்றால் சங்கடம் தான். கண்டிப்பாக 2 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும், அங்கு தலையைக் காட்டிவிட்டு நாம் பசும்பொன் புறப்படலாம் எனக் கூறியுள்ளார். இதையடுத்தே, வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோருக்கு நிலைமையைச் சொல்லி, கொஞ்ச நேரம் தான் இருக்க முடியும் என உதயநிதி டீமில் இருந்து தெரிவித்துள்ளனர்.

எனக்காக காத்திருப்பாங்க
பின்னர், அக்டோபர் 30ஆம் தேதி காலை, திட்டமிட்ட நேரத்தைவிட முன்பே திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டார் உதயநிதி. ஆனால், செல்லும் வழியெங்கும் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதால் பரபரப்பாகவே நிகழ்ச்சிக்குச் சென்று, பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை இருபது நிமிடங்களுக்குள்ளேயே முடித்துக்கொண்டு, உதயசூரியன் எம்.எல்.ஏ இல்ல திருமண நிகழ்விலும் பங்கேற்றார்.

அவசர அவசரமாக
அங்கிருந்து அவசர அவசரமாக சேலம் புறப்பட்டுச் சென்று, சேலம் விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து காரில் பசும்பொன் சென்று தேவர் குருபூஜையில் அமைச்சர்களுடன் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பினார் உதயநிதி ஸ்டாலின். அந்த 3 நாட்களும், தொடர் அலைச்சல்கள், பரபரப்புகள் என இருந்தாலும், டென்ஷனை வெளியே காட்டிக்கொள்ளாமல், அதே நேரம் உற்சாகமாகவும் இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

உடன்பிறப்புகள் நெகிழ்ச்சி
உதயநிதி ஸ்டாலினின் பிஸியான கட்சி நிகழ்ச்சி ஷெட்யூலுக்கு மத்தியில் பசும்பொன் செல்லும் திட்டம் திடீரென முடிவு செய்யப்பட்ட நிலையிலும், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாது, தலையைக் காட்டிவிட்டு உடனே கிளம்பி விடலாம் எனக் கூறி, அதன்படியே, தனக்காகக் காத்திருந்த உடன்பிறப்புகளின் உச்சி குளிரச் செய்தார் உதயநிதி என உற்சாகமாகக் கூறுகிறார்கள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட உடன்பிறப்புகள்.

கட்சியினரின் மனம் நோகாமல்
மேலும், தங்களிடம் உறுதி அளித்ததற்காக, உதயநிதி ஸ்டாலின் மிகவும் சிரமப்பட்டு நிகழ்ச்சியில் வந்து பங்கேற்றுச் சிறப்பித்ததை எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியனும் தங்களது ஆதரவாளர்களிடம் வியந்து கூறியுள்ளனர். கட்சித் தொண்டர்களின் மனம் வருந்தாமல், சுமூகமாக நடந்துகொள்வதில் உதயநிதி கெட்டிக்காரர் என சீனியர்கள் மட்டத்திலும் பேசப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications