செந்தில் பாலாஜிக்கு உடனே அமைச்சர் பதவியா? திமுக நிர்வாகிகள் சொல்வது என்ன?
சென்னை: செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அவர் அமைச்சர் ஆவதற்கு தடையில்லை என்ற சூழலில், விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதுதொடர்பாக கேள்விக்கு திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வாசித்தது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி?: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதில் சட்டப்பூர்வமான தடைகள் இல்லை எனவே, அவர் விரைவில் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜி இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியே வருவார் என திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி: இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜாமீன் என்பது நீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான சட்டப்படியான உரிமை. ஆனால், இவர்கள் தேவையில்லாமல் ஏறத்தாழ 15 மாத காலம், செந்தில் பாலாஜியை சிறையிலேயே வைத்திருந்தனர். அந்த வழக்கில் என்ன முகாந்திரம் இருக்கிறது என்று தெரியவில்லை. குற்றச்சாட்டுப் பதிவிலும் கூட சரியான முறையில், குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை பெற்றுவிட்டால், 15 மாத காலமாக அவர் சிறையிலே இருந்தது, அவருடைய உரிமை மீறிய செயலாகவே கருதப்படும். அந்த உரிமையை குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்வது அனைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறை. காரணம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர்கள் குற்றவாளிகள் என்று கருதப்படமாட்டார்கள். செந்தில் பாலாஜி குற்றம்சாட்டப்பட்டவராகவே, 15 மாத காலம் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
தாமதமாக கிடைத்த நீதி: அதுவும், அமலாக்கத்துறை திட்டமிட்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மத்திய அரசு தங்களுக்கு கீழ் உள்ள விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது நிரூபணமாகி உள்ளது. பாஜகவில் இணைந்தால் பாஜக வாஷிங் மெஷின் மூலம் அவர்கள் தூய்மையாகிவிடுவார்கள். அப்படி குற்றம்சாட்டப்பட்ட பலருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு கால தாமதமாக கிடைத்த நீதியாகவே இதை கருதுகிறேன்.
செந்தில் பாலாஜிக்கு அந்த உரிமையை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. ஆனால், அமலாக்கத் துறை வலியுறுத்தலின் காரணமாக, ஜாமீன் வழங்க இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவி எப்போது?: செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டிகேஎஸ் இளங்கோவன், "அதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் ஆவதற்கு தடையில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் முத்துசாமி பேட்டி: அதேபோல, கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, "செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம். அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து கட்சித் தலைவர் முதல்வர் முடிவெடுப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி பேட்டி: அதேபோல, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும்போது, "செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியான விஷயம். இது செந்தில் பாலாஜியின் 15 மாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. செந்தில் பாலாஜி போல் பொறுமையோடு சட்ட போராட்டம் நடத்திய ஒருவரை பார்க்க முடியாது.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவெடிக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் இது பற்றி அறிவிப்பார். நாங்கள் அதைப் பற்றி கருத்து கூற இயலாது" எனத் தெரிவித்துள்ளார் ரகுபதி.












Click it and Unblock the Notifications