அரசியல் விளையாட்டுகளுக்காக நீதிமன்றங்கள் மைதானங்கள் ஆகின்றன.. எடப்பாடி வழக்கில் நீதிபதி கருத்து
சென்னை: ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும், ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் சொந்த அரசியல் விளையாட்டுகளுக்காக நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானங்களாக ஆக்கப்படுகின்றன என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி டெண்டர் முறைகேடு நடந்ததாகவும் இதுகுறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என்று கோரியும் எடப்பாடி பழனிசாமி மீது ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:- எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்.எஸ். பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் 2018ல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார்.

12சாட்சிகள், 112ஆவணங்கள் குறித்த விசாரணை நடத்திய அதிகாரி மனுதாரர் கூறிய புகாருக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேண்டியோர்களுக்கு சாதகமாக வேண்டியதை வழங்கினார் என்பதற்கோ, சுய லாபம் அடைந்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளார். இந்த அறிக்கையை லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த அரசு அனுமதி அளித்தது ஏன் என்பதற்கு எந்தவித காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. இடைப்பட்ட காலத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தவிர, வேறு எந்தவித மாற்றமும் நிகழாத நிலையில், இந்த வழக்கில் மீண்டும் புதிதாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட முடியாது.
அரசு என்பது சட்டப்படி ஒன்று தான், எந்த கட்சி அதிகாரத்திற்கு வருகிறது என்பது முக்கியமல்ல. அரசு எடுத்த முடிவை எந்த காரணங்களும் இல்லாமல் மாற்றவும் முடியாது. தனி நபரின் அல்லது அரசியல் கட்சியின் அரசியல் செயல் திட்டம் சட்டத்தின் ஆட்சியை வீழ்த்தி விடக்கூடாது. இந்திய அரசியல் சாசனம் வந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படும் இயல்பை இழந்து விட்டனர். ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் பிறப்பிக்கும் உத்தரவுப்படி அவர்கள் செயல்படுகிறார்கள்.
ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும், ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் சொந்த அரசியல் விளையாட்டுகளுக்காக நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானங்களாக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவுகள், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் விவாத பொருளாக மட்டுமே நீடிக்கிறது. சாதாரண ஏழை வழக்காடிகளுக்கான நீதிமன்றம் நேரம் என்பது, இதுபோன்ற வழக்குகளால் விழுங்குகிறது.
எனவே 2018ல் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குறைகான முடியாது. மறு விசாரணை நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆட்சி மாற்றம் காரணமாக மட்டுமே புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும், புகார்தார் சம்பந்தப்பட்ட மேஜிஸ்த்திரேட் சென்று நிவாரணம் பெறலாம். இவ்வாறு நீதிபதி கூறினார்.












Click it and Unblock the Notifications