பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி... திமுக திசைமாறிச் செல்வதாக விமர்சனம்
சென்னை: திமுகவில் நேற்று கட்சிப்பதவி பறிக்கப்பட்ட நிலையில் வி.பி.துரைசாமி இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு சென்ற வி.பி.துரைசாமி, அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். மேலும், திமுக தொடங்கப்பட்டதன் நோக்கம் திசைமாறிச் செல்வதாகவும், அவர் விமர்சித்துள்ளார்.

இதனிடையே திமுகவில் கட்சிப்பதவி மட்டுமே பறிக்கப்பட்டிருந்த நிலையில், அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்தும் தன்னை நீக்கி விடுமாறு துரைசாமி நேற்று திமுக தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த ஞயிற்றுக்கிழமை மாலை பாஜக மாநில தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்து பேசிய 5-வது நாளில் இந்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
வி.பி.துரைசாமியை பொறுத்தவரை தற்போது அவர் சென்றிருப்பது 3-வது அரசியல் கட்சியாகும். அதிமுகவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர், அங்கிருந்து ராஜ்யசபா எம்.பி.பதவியை உதறிவிட்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு கருணாநிதி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், துணை சபாநாயகர் பொறுப்புகளை வழங்கினார்.

முன்னதாக நேற்று ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், எ.வ.வேலு மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் கட்சி தன் மீது நடவடிக்கை எடுத்தால் அதை கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்வேன் எனவும் தெரிவித்திருந்தார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், தன்னை திமுகவில் இருந்து தற்காலிகமாகவோ, முழுமையாகவோ விலக்குவதற்கு முன்னரே வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தது தான்.












Click it and Unblock the Notifications