நொறுங்கிடுச்சே.. அசுர வேகத்தில் காய்களை நகர்த்தி! காரியங்களை சாதித்த ஸ்டாலின்! திணறும் பாஜக, அதிமுக
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் இடங்களை திமுக கூட்டணி அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. ஆனால் பாஜக, அதிமுக இன்னும் கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியாமல் கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
திணறும் அதிமுக பாஜக: பாஜக, அதிமுக இன்னும் கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியாமல் கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் அதிமுக இன்னும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 7 சீட் கேட்ட தேமுதிகவின் கோரிக்கையை அதிமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. அதேபோல் தேமுதிக 1 ராஜ்ய சபா சீட்டும் கேட்டுள்ளது.
இன்னொரு பக்கம் பாமக பாஜக, அதிமுக இரண்டு கட்சிகளுடன் பேசி இருக்கிறது. பாமக, தேமுதிக, இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று தகவல்கள் வருகின்றன.
பாமகவை இழுக்க பாஜகவும் அதிமுகவும் வலையை விரித்துள்ள நிலையில், எந்த வலையில் பாமக சிக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில்தான் அன்புமணி ராமதாஸ் உடனும், பிரேமலதா உடனும் பேச்சுவார்த்தை நடத்த 2 மத்திய அமைச்சர்களை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு அனுப்பி இருக்கிறாராம். பாமக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக அமைச்சர்கள் விகே சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் இன்று தமிழ்நாடு வருகிறார்கள். இரண்டு கட்சிகளையும் அதிமுக கூட்டணிக்கு செல்ல விடாமல் பாஜக கூட்டணிக்கு அழைப்பதே இவர்களின் நோக்கம் என்கிறார்கள் .
இந்த குளறுபடிகள் காரணமாக பாமக, பாஜக, அதிமுக, தேமுதிக என்று யாரும் இதுவரை கூட்டணி முடிவை எடுக்காமல் உள்ளனர்.
திமுக அதிரடி: கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.
அதேபோல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.
மதிமுக கூட்டணி: இது போக திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது . லோக்சபா தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று வைகோ அறிவித்துள்ளார். ஆனால் ராஜ்யசபா சீட் பற்றி பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications