எத்தனை பொய்.. என்னென்ன சதி.. எல்லாம் வீழ்ந்தது.. விரட்டப்பட்டது பாஜக.. திருமா ஆவேசம்
சென்னை: மண்ணைக் கவ்வியது சாதிய மதவாத சனாதனக் கும்பல். மகுடம் சூடியது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. சனாதனத்தை வீழ்த்தி சனநாயகத்தைக் காப்பாற்றிய தமிழக மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்து 6 தொகுதிகளில் போட்டியிட்டது விடுதலைச் சிறுத்தைகள். த னியாக பானைச் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள், மிகச் சிறப்பாக களப் பணியாற்றி நான்கு தொகுதிகளில் வென்றுள்ளது.
வென்ற நான்கு தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகள் என்பது சிறப்பானது. இதன் மூலம் பொதுத் தொகுதிகளிலும் நாங்கள் வெல்ல முடியும், நாங்கள் சாதிக் கட்சி அல்ல, மக்களுக்காக உழைக்கும் சக்தி என்பதை விடுதலைச் சிறுத்தைகள் நிரூபித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் வெற்றி குறித்து திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார். அதன் விவரம்:
பாஜகவுக்கு கடைக்கோடியில் 2.. கொங்கு மண்டலத்தில் 2.. இது ஏதாவது குறியீடா?
சதிகள் முறியடிப்பு
சனாதன சக்திகளின் சதிகளை முறியடித்து சனநாயகத்தையும் தமிழகத்தையும் காப்பாற்றிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொள்கைக் கூட்டணியை உருவாக்கி மகத்தான வெற்றியைப் பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எமது உளமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
6ல் போட்டியிட்டு 4ல் வெற்றி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் ஒரு கட்சி தனி சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெறுவது தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.
பொதுத் தொகுதிகளிலும் வெற்றி
அதுமட்டுமின்றி இரண்டு பொதுத்தொகுதிகளைப் பெற்று அந்த இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும். போட்டியிட்ட ஆறு இடங்களில் நான்கு இடங்களை வென்றுள்ளோம். சனாதனத்துக்கு எதிரான போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக 4 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்து ஆதரவளித்த தமிழக மக்களுக்கு தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜகவின் சதி
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பதற்காகப் பாஜகவும், அதிமுகவும் எத்தனையோ தில்லு முல்லுகளைச் செய்தன. பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டன. வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களையும், பட்டியல் சமூக மக்களையும் கூறுபடுத்தி அவர்களுக்கிடையில் பகைமையை உருவாக்கின. மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தன.
நல் மகுடம்
அனைத்துச் சதிகளையும் முறியடித்து அவர்களைப் புறம் ஒதுக்கிவிட்டுத் தமிழக மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான ஆதரவை நல்கி மகுடம் சூட்டி இருக்கிறார்கள். முதல்வராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் கொரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தை காப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.
மக்களுக்கு உதவ வேண்டும்
கொரோனா பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவும்விதமாகக் குடும்பம் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் தருவோம் என தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின் படி அந்த உதவித் தொகையை உடனே வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோற்றது பாஜக
தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பாஜக படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் அமி்த்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.