நேரம் கால பார்க்காமல் உழைப்பு! ஸ்டாலினை பார்த்து தினமும் நான் வியக்கிறேன்! உருகும் துரைமுருகன்!
ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக நடத்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திட்டம்.
சென்னை: நேரம் காலம் பார்க்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் உழைத்து வருவதால் அவரை தினமும் தாம் வியந்து பார்ப்பதாக மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் மார்ச் 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் அது குறித்து வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ள அவர், அதில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாறவுள்ளது என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் விடுத்துள்ள முதல் வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது;

நித்தமும் நான் வியக்கிறேன்
ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்துக்குள் ஈடு இணையற்ற சாதனைகளைச் செய்து இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சர்களில் தலைசிறந்தவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்பதைப் பார்த்து நித்தமும் நான் வியந்து நிற்கிறேன். இளம்வயதில் துள்ளித் திரிந்து 'முரசொலி' நாளிதழ் பணிகளைச் செய்து வந்தார். கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை தானே உருவாக்கி, அதன் மூலமாக அந்த வட்டாரத்தில் சமூகப் பணிகளை ஆற்றினார்.

நாடு முழுக்க பரப்புரை
இயல்பிலேயே பிறந்த கலையார்வத்தின் காரணமாக நாடக மேடைகளில் தோன்றி நாடு முழுக்க பரப்புரை நாடகங்களை நடத்தினார். சென்னை மாவட்டக் கழகத்தின் தூணாக வளர்ந்தார். இளைஞரணியை உருவாக்கிய காலத்தில் அதன் ஏற்றமிகு செயலாளராக வளர்ந்தார். துணைபொது செயலாளராக- பொருளாளராக - செயல் தலைவராக உயர்ந்து இன்று கழகத்தின் தன்னிகரில்லா தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

சாட்சியங்கள்
நிர்வாகப் பணிகளில், சென்னை மாநகரத்தின் வணக்கத்துக்குரிய மேயராக - சட்டமன்ற உறுப்பினராக - அமைச்சராக - துணை முதலமைச்சராக வளர்ந்து இன்று முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார்.ஆட்சிப்பணியாக இருந்தாலும் - கட்சிப்பணியாக இருந்தாலும் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு - இன்றைய உயர்வுகள் அனைத்தையும் பெற்றவர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவருமே சாட்சியங்களாக இருக்கிறோம்.

நேரம் காலம் பாராமல்
இந்த உழைப்பைக் கூட நேரகாலம் பார்க்காமல் எல்லாப் பொழுதும் அவர் ஆற்றி வந்த காரணத்தால் தான் அவர் அடைந்த வெற்றிகள் அனைத்தும் யாராலும் தொட முடியாத வெற்றியாக அமைந்திருந்தன. நம்முடைய தலைவரின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருக்கிறது என்பதில் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications