எப்போதும் இல்லாத புதிய முறை.. திமுகவை "திக்கி" தண்ணி குடிக்க வைத்த ஒரு முடிவு.. திடீர்ன்னு சிக்கலாமே
சென்னை: தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் மாநில அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் குறித்து திமுக கவலை அடைந்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இது குறித்து விசாரித்தபோது வெளிவராத பல தகவல்கள் கிடைத்துள்ளது.
பொதுவாக, தேர்தல் காலத்தில் தபால் வாக்குகளுக்கு முக்கியத்துவம் உண்டு. வாக்குப்பதிவின் போது முதல் முதலாக தபால் வாக்குகள் தான் எண்ணப்படும். அந்த வாக்குகள் பல வேட்பாளர்களின் வெற்றித் தோல்வியை தீர்மானித்திருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு, 3 மூன்று மாதம் கழித்து தேர்தல் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டபோது தபால் வாக்குகள் தான் திமுக கதிர் ஆனந்த்தை வெற்றிபெற வைத்தது. இது போல பல வேட்பாளர்களின் வெற்றித் தோல்விக்கு தபால் வாக்குகள்தான் காரணமாக இருந்துள்ளன.

இந்த தபால் வாக்குகள், வாக்குப்பதிவின் போது தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கானது. தங்களின் வாக்குகளை பதிவு செய்ய இவர்களுக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒரு படிவம் கொடுக்கப்படும். அதில் தங்கள் வாக்கினை பதிவு செய்து சீலிடப்பட்ட கவரில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான படிவத்தை வாக்குப்பதிவு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே தேர்தல் பணியில் அமர்த்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.
படிவம் கொடுக்கப்பட்டதை அறிந்ததும் அரசியல் கட்சியினர், சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்களை அணுகி, தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வைத்து அந்த படிவத்தை கையோடு பெற்றுக்கொண்டு வந்து கொத்துக்கொத்தாக தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைப்பர். சில சமயம் சம்மந்தப்பட்ட அரசு ஊழியரே தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்து விடுவர். இதில், அதிமுக ஆதரவு மனநிலையில் உள்ள அரசு ஊழியர்களிடம் திமுக பேரம் பேசியும், திமுக ஆதரவு மனநிலையிலுள்ள அரசு ஊழியர்களிடம் அதிமுக பேரம் பேசி படிவத்தைப் பெறுவதும் நடக்கும்.
அரசு ஊழியர்கள் பெரும்பாலும் திமுக ஆதரவாளர்களாகவே இருப்பதால் இந்த படிவத்தைப் பெறுவதில் திமுகதான் முன்னணியில் இருக்கும். அந்த கட்சியினர் கொண்டு வந்து கொடுக்கும் படிவத்தின் எண்ணிக்கையைப் பொறுத்தே, அரசு ஊழியர்களின் வாக்குகள் திமுகவுக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தேர்தல் நடப்பதற்கு முன்பே அதிகாரிகள் கணித்துவிடுவர்.
இப்படிப்பட்ட நடைமுறையில்தான் இந்த முறை திடீரென ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது தேர்தல் ஆணையம். அதாவது, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓட்டளிக்கும் படிவத்தை தராமல், தேர்தலுக்கான பயிற்சி அளிக்கும் போது படிவத்தைக் கொடுத்து, அப்போதே வாக்களிக்கும் முறையை புகுத்தியுள்ளது.
கடந்த 12 ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வாக்குப் பதிவின் போது ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. நடக்காத மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் நடந்துள்ளன. 16-ந்தேதி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
இந்த பயிற்சி வகுப்புகளின் போது அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய படிவம் கொடுக்கப்படுகிறது. அதன்படி தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள் அரசு ஊழியர்கள்.
தேர்தல் பயிற்சி வகுப்புகளின் போதே தபால் வாக்குகளை பதிவு செய்யும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருப்பதால், அரசியல் கட்சிகளால் தபால் வாக்கு படிவங்களை சேகரிக்க முடியவில்லை. இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட அனைத்தையும் நிறைவேற்றுவோம் என 2021 தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்திருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்தனர். ஆனால், நடக்கவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 12 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என கடந்த 3 ஆண்டுகாலமாக அரசு ஊழியர்கள் வலியுறுத்தினர். சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதே தவிர, முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், திமுக அரசு மீதான அதிர்ப்தி அரசு ஊழியர்களிடம் ஆக்ரமித்திருந்தது. இந்த நிலையில் தான், தங்களின் தபால் வாக்குகளை போட்டுள்ளனர். இப்படிப்பட்ட புறச் சூழல்களால், அவர்களின் தபால் வாக்குகள் யாருக்கு என்பதை அறிய முடியாததால் தான் திமுக தலைமை கவலை அடைந்திருக்கிறது.
திமுகவின் வெற்றிக்குறித்து அறிவாலயத்தில் அலசப்படும், ஆராயப்படும் பல்வேறு காரணிகளில், அரசு ஊழியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்களின் தபால் வாக்குகளின் நிலை என்ன ? என்பதும் முக்கிய விசயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications