66 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்தை இழக்காத கட்சி திமுக! தமிழக அரசியலில் வரலாற்று பெருமை!
சென்னை: 66 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்தை இழக்காத கட்சி என்ற அந்தஸ்தை பெறுகிறது திமுக.
உதயசூரியன் சின்னத்தை திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நாள் மார்ச் 2, 1958. இன்று தான் திமுகவுக்கு மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆஸ்தியை இழந்தாலும் இழக்கலாம், அடையாளத்தை இழந்து விடக் கூடாது என்ற சினிமா வசனத்தை போல் பல தேர்தல்களில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தாலும், உதயசூரியன் சின்னத்தை மட்டும் திமுக இழக்கவில்லை. ஒரு கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அவர் எப்படிப்பட்டவர் என்பதை பார்க்காமல் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் மக்கள் ஏராளம்.

அதிமுக கூட இரண்டு முறை இரட்டை இலை சின்னத்தை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டு அணிகள் அதிமுகவில் உருவாகின. இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால் ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும் தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்டது. அதேபோல் 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது சசிகலா தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால் அப்போதும் சின்னம் முடக்கப்பட்டது.
இப்படி மொத்தமாக 2 முறை இரட்டை இலை சின்னத்தை இழந்து அதிமுக தேர்தலை சந்தித்த காலம் உண்டு. அதே போல் மதிமுகவும் குடைச்சின்னம், பம்பரம் சின்னம், சைக்கிள் சின்னம், மீண்டும் பம்பரம் சின்னம் என மாறி மாறித்தான் போட்டியிட்டு வருகிறது. அதே போல் தமிழ்நாட்டின் ஏணைய அரசியல் கட்சிகள் அனைத்தும் கட்சி தொடங்கும் போது முதல்முறை போட்டியிட்ட சின்னங்கள் அடுத்தடுத்து கிடைப்பதில்லை. வாக்கு சதவீதம் குறைவு காரணமாக சின்னங்களை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஆனால் திமுக மட்டுமே அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக, அதாவது தொடர்ந்து 66 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்தை இழக்காத கட்சி என்ற வரலாற்றுப் பெருமையை தாங்கி நிற்கிறது. திமுக சந்திக்காத தோல்விகள் இல்லை, நெருக்கடிகள் இல்லை, இருப்பினும் உதயசூரியன் சின்னத்தை தக்க வைத்து மேஜிக் செய்துள்ளது. ஒரு சின்னத்தை இழக்காமல் இத்தணை ஆண்டுக்காலம் கட்சியை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.
காங்கிரஸ் கட்சியே இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என்று பிரிந்த போது இரண்டு சின்னங்களாக சிதறுண்டது. திமுகவிலிருந்து வைகோ விலகிய போது கூட பெரும் பிரளயம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி தனது சாதுர்ய செயல்பாடுகளால் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டதுடன் சின்னத்தையும் இழக்காமல் பார்த்துக்கொண்டார்.
1949 ஆம் ஆண்டு திமுகவை அண்ணா ஆரம்பித்த நிலையில், 1956 ஆம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற 2வது மாநில மாநாட்டில், தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1957ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு, 15 இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி, மாநிலக் கட்சியாக அந்தஸ்து பெற்ற திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் அதிகாரபூர்வமாக தரப்பட்டது.












Click it and Unblock the Notifications