சபாஷ்! உச்சபட்ச மின் தேவையை 'பவர் கட்’டே இல்லாமல் ஈடு செய்த மின்சாரத்துறை! அமைச்சர் பெருமிதம்!
உச்ச பட்ச மின் நுகர்வை மின் தடை ஏதுமின்றி ஈடு செய்துள்ளது திமுக அரசு.
சென்னை : தமிழ்நாட்டில் உச்ச பட்சமாக நேற்று 17,749 மெகா வாட் மின் நுகர்வு செய்யப்பட்டதாகவும், இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 15) மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக இந்த மாதத்தில் மின் நுகர்வு இருந்து வருகிறது.

உச்சத்தை எட்டும் மின் நுகர்வு
தமிழ்நாட்டின் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் கோடை காலத்தில் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பகல் நேரத்தில் 17,196 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு தற்போதைய மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டி வருகிறது.

புதிய உச்சம்
தமிழ்நாட்டில் ஏற்கனவே கடந்த மார்ச் 10ஆம் தேதி அதிகபட்சமாக 17,647 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. இந்த மாதத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாகி வருவதன் காரணமாக வீடுகளில், ஏசி உள்ளிட்ட மின் குளிரூட்டி சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், நாளுக்கு நாள் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. அந்தவகையில், மார்ச் 14ஆம் தேதி மின் நுகர்வு 17,705 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியது. அதைத்தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதியான நேற்று மின் நுகர்வு 17,749 மெகாவாட் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

மின் தடையே இன்று ஈடு செய்யப்பட்டது
தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 15) மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று 15/03/2023 தமிழ்நாட்டில் மின் நுகர்வு அதிகபட்சமாக மெகாவாட் அளவில் 17,749 மெகாவாட். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 14/03/2023ல் 17,705 மெகாவாட்" எனத் தெரிவித்துள்ளார்.

மின் நுகர்வு அதிகரிப்பை ஈடுகட்ட
இந்த மாத துவக்கத்தில் இருந்தே மின் தேவை 16 ஆயிரம் மெகா வாட்டுக்கு மேல் உள்ளது. கோடைகால உச்சபட்ச மின் தேவையான 18,100 மெகாவாட்டினை பூர்த்தி செய்வதற்கு அனல் மின் நிலையங்கள், மாநில மற்றும் மத்திய தொகுப்புகள், காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள், மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை பரிமாற்ற முறையின் கீழ் வெளி மாநிலங்களுக்கு கொடுத்ததன் அடிப்படையில் உள்ளிட்ட பல்வேறு வகையில் மின்சாரத்தைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மின் வெட்டால் பறிபோன ஆட்சி
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் மின் வெட்டு அதிகமாக இருந்ததை எதிர்க்கட்சியான அதிமுக கையில் எடுத்து மிகத் தீவிரமாக விமர்சித்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மின்வெட்டையே பிரதானமாக முன்வைத்து திமுகவை தாக்கியது அதிமுக. அதன் விளைவாக 2011ல் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு நேராமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications