கவனக்குறைவாக அப்படி பேசல.. திமுக இந்துக்களுக்கு எதிரானது தான்.. விடாத நிர்மலா சீதாராமன்
சென்னை: தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சிதான் என்றும் தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அதற்கு ஆதரவாக இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தமிழ்நாட்டில் ராமர் பெயரில் பூஜைகள், அன்னதானம் வழங்க, பிரசாதம் வழங்க தடை விதிக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பிலோ இதுபற்றி திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளில் பூஜைகள் செய்யவோ, அன்னதானம் - பிரசாதம் வழங்கவோ எந்த தடையுமே விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

கவனக்குறைவாக அப்படி பேசவில்லை: அன்றைய தினம், நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஆளும் திமுக இந்துக்களுக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
நான் கவனக்குறைவாக அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. நான் என்ன பேச வேண்டும் என்று நினைத்தேனோ அந்த அர்த்தத்தில் தான் பேசினேன். திமுக இந்துக்களை தாக்கி தொடர்ந்து பேசி வருகிறது என்று நான் உண்மையாகவே நம்புகிறேன். நான் அங்கு வாழ்ந்த அனுபவம் உள்ளதால் பலமுறை தமிழ்நாட்டை பற்றி பேசுகிறேன். எனவே நான் அவசரப்பட்டோ, கவனக்குறைவாகவோ அப்படி பேசவில்லை.
காங்கிரஸ் கண்டிக்கவில்லை: பிரிவினைவாதத்தை அவர்கள் இப்போது ஆதரிக்கிறார்களா என்று தெரியாது. ஆனால் பிரிவினைவாத தொனியில் அவ்வப்போது குரல்கள் எழுகின்றன. பாஜக தற்போதுதான் தமிழ்நாட்டில் தொடக்க நிலையில் உள்ளது. ஜனசங்கம் காலத்தில் இருந்தே அங்கு இருந்தது. தற்போது வலுவடைந்து வருகிறது. தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றும். எனது வருத்தம் எல்லாம் தேசியக்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான குரல்களுடன் சேர்ந்து இருக்கிறதே என்பதுதான்.
இந்துக்களுக்கு எதிரான கட்சியான திமுகவை காங்கிரஸ் கண்டிக்கவில்லை. கர்நாடகாவில் எம்பியாகவும் மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் தம்பியாகவும் இருக்கும் டிகே சுரேஷ் பிரிவினைவாத குரலில் பேசுகிறார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். தென்மாநிலங்களுக்கு உரிய நிதி கொடுப்பது இல்லை என்றும் இப்படியே போனால் தனிநாடுதான் கேக்க வேண்டும் என்று டிகே சுரேஷ் பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications