ஒருவழியாக.. ஆன்மீக தமிழ்நாட்டை காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது: அண்ணாமலை ட்வீட்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் 1967க்கு முன் இருந்த செழுமையான ஆன்மிக வழியில் தமிழ் மண்ணின் பெருமைகளை காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு திமுக அரசு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பட்டு சட்டை, வேட்டியுடன் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
பின்னர் கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பண்டைய கால கலாச்சாரம், பெருமை, கல்லணை, கோயில்கள், கவிஞர்கள், இலக்கியம், சோழர்கள் ஆகியவற்றை முப்பரிமான வீடியோ மூலம் காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. இது காண்போரை வியக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இறுதியாக 1967க்கு முன் இருந்த தமிழ் நாட்டின் ஆன்மிகம் வழியில் தமிழ் மண்ணின் பெருமைகளை சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. சங்க இலக்கியம், கல்லணை, ராஜ ராஜ சோழன் என தமிழ் பெருமைகளை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பேசியுள்ளது. செஸ் ஒல்ம்பியாட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவிற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications