எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி சொன்ன "ரகசியம்".. ஓபனாக உடைத்து.. 16 அடி பாய்கிறது "குட்டி சூரியன்"
கரூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்
சென்னை: ஒற்றை செங்கல் விஷயத்தில் எப்படி உதயநிதி, பரபரப்பாக பேசப்பட்டாரோ, அதேபோல நீட் விஷயத்திலும் பேசப்பட்டு வருகிறார்.. அந்த வகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சீக்ரெட் சொல்லி உள்ளார்.
உதயநிதிக்கும், அனிதா குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அவ்வளவு சுலபமாக கேட்டுவிட முடியாது.. கடந்த எம்பி தேர்தலின்போதும் சரி, இந்த முறை சட்டமன்ற தேர்தலின்போதும் சரி, அனிதாவின் பெயரை தமிழகமெங்கும் உச்சரித்து கொண்டே வலம் வந்தவர் உதயநிதி.
"அனிதாவை ஞாபகம் இருக்கா? அனிதாவை கொன்றவர்கள்தான் மோடி, இபிஎஸ், ஓபிஎஸ்.. இவங்களுக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா?" என்று பகிரங்கமாகவே பொதுமக்களிடம் கேள்விகளை எழுப்பினார். அதுமட்டுமல்ல, அரியலூர் எப்போது சென்றாலும் சரி, செந்துறையை அடுத்த குழுமூரில் அனிதாவின் நினைவு நூலகத்திற்கு சென்றுவிடுவார்.. அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்..

கன்னிப்பேச்சு
எல்லாவற்றிலும் மேலாக, முதன்முதலாக வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்று உரையாற்றிய போது தன்னுடைய கன்னி பேச்சிலும், உதயநிதி குறிப்பிட்டு பேசியது நீட் பற்றி தான்.. "நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். இதில் கட்சி பேதம் எதுவுமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும்" என்று உதயநிதி வைத்த கோரிக்கையை எந்த கட்சிகளும் மறந்திருக்காது.

எடப்பாடி
எனினும் எதிர்க்கட்சிகள் நீட் விஷயத்தில் உதயநிதியை தொடர்ந்து விமர்சித்து கொண்டே இருக்கிறது.. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி எங்கே போனாலும் உதயநிதியை விடுவதில்லை.. நீட் விவகாரத்தில் அன்று உதயநிதி ஏன் அப்படி சொன்னார்? ஏன் அப்படி பொய் வாக்குறுதிகளை தந்தார் என்று கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார்.. அதிலும் உதயநிதி "நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருப்பதாக சொன்னாரே, அந்த ரகசியத்தைப் பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்திருக்கலாமே .. ஏன் செய்யவில்லை?" என்று கேள்வியும் கேட்டு வருகிறார்.

என்ன ரகசியம்
இப்படிப்பட்ட சூழலில் தான், அந்த ரகசியம் என்னவென்று உதயநிதியே ஓபனாக சொல்லிவிட்டார்.. கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்... அப்போது உதயநிதி பேசியபோது, "திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தப்போது கரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தது. ஆக்சிஜன், படுக்கை ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவியது. கரோனாவை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கரோனா 3-வதுஅலையை எளிதாக கடந்திருக்கிறோம்.

கரூர் பிரச்சாரம்
சட்டப்பேரவைத தேர்தல் பிரச்சாரத்தை சொந்த ஊரான திருவாரூரில் தொடங்கினேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தை சென்னைக்கு வெளியே கரூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளேன். கரூர் மாவட்டத்திற்கும் திமுகவுக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது உங்களுக்கு தெரியும். கடந்த 1957-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் வெற்றிப் பெற்றுதான் கருணாநிதி எம்எல்ஏ ஆனார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு ரத்துக்கான சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பிய ஒரு வாரத்திற்குள் மீண்டும் நீட் தேர்வு ரத்து மசோதாவை நிறைவேற்றி மீண்டும் அனுப்பியிருக்கிறோம். இது அதிமுக அடிமை அரசு அல்ல... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.

பழனிசாமி
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் உதயநிதிக்கு தெரியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறார்... அந்த ரகசியத்தை இங்கு சொல்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம். அதிமுக, பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார். கரூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட 51,531 மனுக்களில் 50,772 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன" என்றார்.

செங்கல்
இப்படித்தான் எய்ம்ஸ் விவகாரத்தில் உதயநிதி மேற்கொண்ட ஒற்றை செங்கல் பிரச்சாரம் டெல்லி வரை எட்டியது.. தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வந்திருந்த அமித்ஷா முதல் நட்டா வரை உதயநிதியை இதற்காகவே தாக்கி பேசிவிட்டு போனார்கள்.. அந்த அளவுக்கு செங்கல் விஷயம் ரீச் ஆகியிருந்தது.. உதயநிதியின் வெற்றிக்கும் அது பெரிதும் உதவியது.. இப்போது நீட் விஷயத்தை தீவிரப்படுத்தி உள்ளார் உதயநிதி.. இதன் பலன் இனிமேல்தான் தெரியும்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications