தேர்தல் அறிக்கையில் சொல்லுவாங்க.. நிறைவேற்றியதாக திமுகவுக்கு வரலாறு கிடையாது- செல்லூர் ராஜு பொளேர்
சென்னை: தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியதாக திமுகவிற்கு வரலாறு கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
வரும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தேர்தலுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனியார் மஹால் ஒன்றில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
"ஆண்டுக்கு 6 சிலிண்டர் திட்டமும், இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய் திட்டமும் போதும் நாம் ஆட்சிக்கு வந்து விடுவோம். இது தவிர,
கூட்டுறவு வங்கி நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என முதல்வர் அறிவித்து உள்ளார்" என்றார்.
மேலும், "என்னைப்பற்றி பல மீம்ஸ்கள் எல்லாம் போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி" என பேசினார். "திமுக அறிவித்துள்ள திட்டங்கள் எதையும் நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும், நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொன்னார்கள். எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்" என்றார்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த அவர், "ஜெயலலிதாவின் மறைவிற்கு காரணமே திமுக கொடுத்து நெருக்கடிதான். பொய்யான வழக்கை உண்மையான வழக்காக மாற்றி மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு காரணம் மன அழுத்தம் தான். ஜெயலலிதா தன்னுடைய உடலை அடக்கம் செய்வதற்கு கூட மனமில்லாமல் வழக்கு தொடுத்தவர்கள் திமுக.
தேர்தலுக்காக பெண்களின் வாக்கு வங்கியை பெறும் நோக்கில் இந்த மாதிரி பொய்யான நாடகத்தை தேர்தல்அறிக்கை வழியாக தெரிவித்துள்ளார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் உள்ளது முடிவுகள் விரைவில் தெரியவரும்" என்றார்.