ஆர்வமின்மை... மந்திரி ஆசை... அதிமுக மாஜிக்களால் பலம் பெறும் திமுக... இனி அடுத்து என்ன நடக்கும்..?
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கும் தனித்தனியே தேர்தல் நடத்தப்படுவதால் இந்த இரண்டு இடங்களையும் திமுகவே கைப்பற்றக்கூடும் எனத் தெரிகிறது.

ஆர்வமின்மை
அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தங்களது எம்.பி.பதவிகளை ராஜினாமா செய்தார்கள். சட்டப்பேரவை தேர்தலில் எப்படியும் அதிமுக வெற்றிபெறும் அவ்வாறு வெற்றிபெறும் பட்சத்தில் அமைச்சர்களாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையிலும் டெல்லி அரசியல் மீதான ஆர்வமின்மையாலும் அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள்.

டெல்லி லாபி
கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் அதிர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து அவருக்கு ராஜ்யசபா எம்.பி.பதவி வழங்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. மாநில அரசியலில் குறிப்பாக 2011-2016 காலகட்டத்தில் அதிமுகவின் நால்வர் அணியில் முக்கிய இடத்தில் இருந்த வைத்திலிங்கத்தால் டெல்லியில் லாபி செய்ய முடியவில்லை.

ஒத்துவராத டெல்லி
இதனால் முழு மனதின்றி தான் கடந்த 5 ஆண்டுகாலமும் டெல்லிக்கு பறந்து வந்தார். இதேபோல் கே.பி.முனுசாமியை பொறுத்தவரை ராஜ்யசபா எம்.பி.யாகி ஒரு வருட காலம் தான் ஆகியுள்ளது. அவருக்கும் டெல்லி அரசியல், நாடாளுமன்ற அலுவல்கள், கிளைமேட் மற்றும் மொழி பிரச்சனை காரணமாக ஒத்துவரவில்லை. இதனால் இவரும் ஆர்வமின்றியே டெல்லிக்கு பறந்துகொண்டிருந்தார்.

எம்.எல்.ஏ. சீட்
இந்நிலையில் தான் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற்றார்கள். இதையடுத்து அவர்கள் இருவரும் ராஜினாமா செய்த எம்.பி. இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு இன்று தேர்தல் தேதியும் குறிக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலம்
தற்போதைய நிலவரப்படி சட்டமன்றத்தில் திமுகவுக்கு உள்ள தனிப்பெரும்பான்மை அடிப்படையில் இரண்டு இடங்களிலுமே திமுக தான் வெற்றி பெறும் எனத் தெரிகிறது. வைத்திலிங்கத்தின் ராஜ்யசபா எம்.பி.பதவிக்காலம் 2022 ஜூன் மாதம் நிறைவடைகிறது. இவரது இடத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளர் அடுத்த ஓராண்டுக்கு மட்டுமே ராஜ்யசபா எம்.பி.யாக இருப்பார். இதேபோல் கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் வரை உள்ளது. இவரது இடத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெறுபவர் அடுத்த 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருப்பார்.

5 ஆண்டுகள்
இந்த இரண்டு இடங்களுக்கும் திமுக சார்பில் யாரை நிறுத்தப்போகிறார்கள் என்ற விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் கார்த்திகேய சிவசேனாபதிக்கு 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருக்கும் வகையில் ஸ்டாலின் வாய்ப்பு வழங்குவார் எனத் தெரிகிறது.
இதனிடையே தமிழகம் மட்டுமின்றி அசாம், மேற்கு வங்கம், மராட்டியம், உள்ளிட்ட மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தை நிரப்ப அக்டோபர் 4-ம் தேதி அன்று தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெருகும் பலம்
அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவை தொடர்ந்து அவரது இடம் காலியிடமாக அறிவிக்கப்பட்டு அதற்கு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா நிறுத்தப்பட்டு போட்டியின்றி தேர்வானார். இதன் மூலம் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 7-ல் இருந்து 9-ஆக உயரவுள்ளது.இதன் மூலம் மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

புதுச்சேரி தேர்தல்
தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் அக்டோபர் 4-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் அக்டோபர் 6-ல் முடிவடைவதால் அங்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே என்.ஆர். காங்கிரஸ், பாஜக, இடையே யார் எம்.பியாவது என்பது குறித்த பனிப்போர் தொடங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications