பாமக, தேமுதிக.. இரு முனைத் தாக்குதலைத் தடுத்து தகர்க்க திமுக பலே திட்டம்!
Recommended Video

சென்னை: தேமுதிகவை தங்களது அணிக்கு கொண்டு வரும் முயற்சியை திமுக கைவிட்டு விட்டு தேமுதிகவையும் பாமகவையும் ஒரு சேர வீழ்த்த பலே திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பழம் நழுவி பாலில் விழுந்து விடும் - இது கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேமுதிக தங்களது அணிக்கு எப்படியும் வந்து விடும் என்ற நம்பிக்கையில் கருணாநிதி கூறிய வார்த்தைகள். ஆனால் கடைசியில் திமுக அணிக்கு அல்வா கொடுத்துவிட்டு மக்கள் நலக்கூட்டணிக்கு சென்று தனக்கு தானே பெரிய அளவில் அல்வாவை கிண்டி கொடுத்துக் கொண்டது தேமுதிக.
கிட்டத்தட்ட 10% வாக்கு வங்கி வைத்திருந்த தேமுதிக தங்களது செயல்பாடுகளாலேயே வாக்கு சதவீதத்தை குறைத்துக் கொண்டார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சுமார் 3% அளவுக்கு குறைந்தது இவர்களது வாக்கு வங்கி. இருந்தாலும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குறைந்தபட்சம் 2000 திலிருந்து 4000 வரை வாக்குகள் இவர்களுக்கு கிடைக்கலாம். இதனாலேயே இவர்களை எப்படியும் தங்களது அணிக்குள் கொண்டு வந்துவிட இரு திராவிட கட்சிகளும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. பாஜகவும் பெரும்பாடுபட்டு வருகிறது.

ஸ்டாலின் கோபம்
ஆனால் அவர்கள் தங்களை இன்னமும் மிகப்பெரிய கட்சியாகவே எண்ணியிருப்பதால் பாமகவுக்கு கீழ் தொகுதிகளை வாங்க மறுத்து வருகின்றனர், இதனால் இவர்கள் எந்த அணி என்பது இன்னமும் முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இப்போது திமுக இவர்கள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். திமுக தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சென்று பார்த்து வந்தார். அவர் கூறியதன் அடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலினும் சென்று பார்த்து வந்தார். ஆனால் அவர் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று கூறினார். ஆனால் பிரேமலதா அரசியல்தான் பேசினார்கள் என்று போட்டு உடைத்து விட்டார். இது ஸ்டாலின் தரப்பை கோபப்படுத்தியுள்ளது.

செலவை நாங்க ஏற்பதா
இருந்தாலும் சுதிஸ் மற்றும் சபரீசன் தரப்பு தொடர்ந்து பேசி வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஊர்பட்ட நிபந்தனைகளை விதித்ததாக தெரிகிறது. 4 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்கவேண்டும் என்று கேட்டதோடு தேர்தலுக்கான முழு செலவையும் திமுகவே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்டதும் ஸ்டாலின் டென்சன் ஆகிவிட்டாராம். உடனடியாக மாற்றுத்திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார்கள் திமுக தரப்பில். அதாவது பாமக வலுவாக உள்ள வடமாவட்டங்களில் உள்ள வாக்குகளை விடுதலை சிறுத்தைகளை வைத்து கவர் செய்வது என்றும் இப்போது தங்கள் கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிடப் போகும் கொங்கு ஈஸ்வரனின் கட்சியை வைத்து கொங்கு மண்டல வாக்குகளை பெறுவது என்று திட்டமிட்டுள்ளனர். இதற்காக பலே திட்டங்களும் தயாராகி வருகிறதாம்.

வேல்முருகன் வியூகம்
அதோடு பாமகவை வடமாவட்டங்களில் வீழ்த்தவும் திட்டம் தயாரித்துள்ளது திமுக. ஏற்கனவே பாமகவில் ராமதாசின் தளபதியாக இருந்தவர் வேல்முருகன். இவர் ஒருகட்டத்தில் பாமகவில் ஓரங்கட்டப்பட்டார். அங்கிருந்து வெளியேறியவர் தமிழக வாழ்வுரிமை கட்சி என்று ஒன்றை ஏற்படுத்தி அதை நடத்தி வருகிறார். அதோடு வன்னியர் சங்கத்தின் தூணாக இருந்த காடுவெட்டி குரு உரிய முறையில் கவனிக்கப்படததாலேயே இறந்து விட்டார் என்ற குற்றசாட்டு காடுவெட்டி குரு குடும்பத்தால் முன் வைக்கப்படுகிறது. அதற்கு காரணம் ராமதாஸ் தான் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மரணம் குறித்த பல்வேறு தகவல்கள் தன்னிடம் உள்ளது என்றும் அதை வெளியிடும்போது பல பெரிய மனிதர்களின் முகத்திரை கிழியும் என்று வேல்முருகன் கூறிவருகிறார்.

பாமகவை வீழ்த்த வியூகம்
வேல்முருகன் ராமதாசுக்கு எதிராக கம்பு சுற்ற ஆரம்பித்ததும் அவர் மீதான சுங்கச் சாவடி உடைப்பு வழக்குகளை ஆளும்கட்சியை வைத்து தூசு தட்ட ஆரம்பித்துள்ளது பாமக. இதை கவனித்த திமுக தரப்பு வேல்முருகனை தங்களது அணியில் இணைத்துக் கொண்டு பாமகவுக்கு எதிராக வியூகம் வகுக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே பாமக மீது கோபத்தில் இருக்கும் வன்னிய இளைஞர்கள் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்று புதிய சங்கங்களையும் தொடங்கியுள்ளனர். இவர்களை தங்களது கூட்டணியில் உள்ள காங்கிரசின் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் மூலம் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது திமுக. ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும் அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணு பிரசாத்துக்கும் அன்புமணிக்கும் ஏழாம் பொருத்தம். ஆக இவரை வைத்து தனது கேம் - ஐ, திமுக விளையாடும் என்று கூறப்படுகிறது.
இப்படியாக பாமகவையும், தேமுதிகவையும் ஒருங்கே சமாளிக்க பலே திட்டங்களை தீட்டி வருகிறது திமுக.












Click it and Unblock the Notifications