நெருங்கும் லோக்சபா தேர்தல்.. நாளை முதல் விருப்ப மனு வாங்கும் திமுக! கடைசி தேதி எப்போது?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ''நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், வரும் பிப்.19-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.

போட்டியிட விரும்புவோர், விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, மார்ச் 1 முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் கட்டணம் ரூ.50 ஆயிரமாகும். விண்ணப்ப படிவத்தை ரூ.2 ஆயிரம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்''என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுவை பெறலாம் என திமுக முதல் கட்சியாக அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் திமுக போட்டியிடும் இடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அந்த நேர்முகத் தேர்வில் வேட்பாளருக்கு கேட்கும் தொகுதியில் செல்வாக்கு இருக்கிறதா, வெற்றி வாய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்படும். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications