ஆதவ் அர்ஜுனா ஆர்எஸ்எஸ் ஆள்.. திமுக பகீர் புகார்.. அலெர்ட் செய்த எம்பி ரவிக்குமார்
சென்னை : விசிக மது ஒழிப்பு மாநாடு அரசியல் ரீதியாக ஏற்படுத்திய விவதாங்களே ஓயவில்லை. இதனிடையே திமுக குறித்து விசிக ஆதவ் அர்ஜுனா வைத்துள்ள விமர்சனம் திமுக - விசிக கூட்டணிக்குள் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக திமுகவினர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. திமுக - விசிக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. என்றும் விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோவும் வைரலானது. அதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பு நடந்தது.

இனி பிரச்னை இருக்காது என்று நினைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அடுத்த பிரச்னை உருவாகியுள்ளது. விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேட்டிகள் தான் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "விசிக கூட்டணி இல்லாமல் திமுகவால் வட மாவட்டங்களில் வெல்ல முடியாது. நடிகர்களே துணை முதல்வர் ஆகும்போது, எங்கள் தலைவருக்கு தகுதி இல்லையா." என்று கூறியிருந்தார்.
இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்பியுமான ராசா ஆதவ் அர்ஜுனா முதிர்ச்சி இல்லாமல் பேசியுள்ளார் என விமர்சித்துள்ளார். சமூகவலைதளங்களிலும் இது பேசு பொருளாகியுள்ளது. திமுக ஐடி விங் ஆதவ் அர்ஜுனாவுக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். "திமுக இல்லாமல் திருமாவே வெற்றி பெற்றது கிடையாது." என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விக்னேஷ் ஆனந்த் என்பவர் தன் எக்ஸ் பக்கத்தில், "2016 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவும் இல்லை. பாமகவுமில்லை. அந்த தேர்தலில் வட மாவட்டங்களில் அதிக சீட்டுகளை பெற்றது திமுக. விசிக கூட்டணியிலிருந்த முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தோல்வியடைந்தார். பாமக தனித்து நின்றது. அதன் முதல்வர் வேட்பாளர் அன்புமணியும் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் திமுக vs அதிமுக நேரடியாக போட்டியிட்டிருந்த தொகுதிகளில் திமுக அதிக இடங்களில் வென்றது." என கூறியுள்ளார்.
ஷஃபீக் என்பவர் தன் எக்ஸ் பக்கத்தில், "திமுக கூட்டணியில் இருந்தாலும் விசிக தலைவர் அண்ணன் திருமா தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். அண்ணன்கள் ஷாநவாஸ், வன்னியரசு போன்றோர் எங்கே எதிர்க்க வேண்டுமோ அங்கு எதிர்க்கிறார்கள். ஆதரவு தரவேண்டிய இடத்தில் ஆதரவு தருகிறார்கள். புதிதாக வந்துள்ள ஆதவ் அர்ஜுனா விசிக சித்தாந்தம் பற்றியோ, நெடுநாள் திட்டத்தை பற்றியோ பேசமால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசி வருகிறார். ஆதவ் அர்ஜுனா ஆர்எஸ்எஸ் ஆள்.. திருமாவை தனிமைப்படுத்தி விடுவதற்குள் சுதாரித்துக் கொள்ள வேண்டும்." என்று கூறுகிறார்.
இந்நிலையில் விசிக எம்பி ரவிக்குமார் நேற்று இரவு எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். மு.க. ஸ்டாலின், திருமாவளவன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் இருக்கும் அந்தப் பதிவில், "புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் ஆகியோரின் வழியில் தலைவர் திருமா, விடுதலை சிறுத்தைகள் கட்சியை இந்திய அளவில் உற்றுநோக்கும் கட்சியாக உருவாக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும், அடுத்துவரும் இரண்டு ஆண்டுகள் விழிப்போடு இருக்க வேண்டும். சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரான பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது என்பேதே 2026 தேர்தலின் முதன்மை பணியாக இருக்க வேண்டும் என்று கூறியள்ளார். திமுகவினர் இந்தப் பதிவையும் பகிர்ந்து ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications