மதுரை ஆலோசனை கூட்டத்துக்கு ஆட்களை திரட்டும் அழகிரி அணி.. உன்னிப்பாக கவனிக்கும் திமுக
சென்னை: மதுரையில் மு.க. அழகிரி கூட்டியுள்ள ஆலோசனை கூட்டத்துக்கு அவரது ஆதரவாளர்கள் மும்முரமாக தயாராகி வருகின்றனர். அதேநேரத்தில் அழகிரி அணியின் ஒவ்வொரு நகர்வையும் திமுக தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
சட்டசபை தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கு முன்னரே கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோரை மாவட்டங்கள் தோறும் அனுப்பி ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் உட்கட்சி பூசலை சரி செய்யும் பணியை திமுக தலைமை மேற்கொண்டது. பல இடங்களில் இந்த முயற்சி கை கொடுத்தது.

திமுகவில் உட்கட்சி மோதல்
இன்னமும் சில மாவட்டங்களில், ஒன்றியங்களில் இந்த உட்கட்சி பூசல் நீடிக்கவே செய்கிறது. உதாரணமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கும் தற்போதைய ஒ.செ.வுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. இதை சரி செய்ய திமுக மேலிடம் முயற்சித்தது. அப்போதைக்கு சரி சரி என தலையாட்டியவர்கள் இப்போதும் பிளவுபட்டே இருக்கிறார்கள்.

ஸ்டாலின் வேண்டுகோள்
இதனை எல்லாம் மனதில் வைத்துதான் அண்மையில் திமுக நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின், மனமாச்சரியங்களை விட்டுவிட்டு தேர்தல் வெற்றி ஒன்றே இலக்கு என பாடுபட வேண்டாம் என்றார். இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் திடீரென மு.க. அழகிரி கோதாவில் குதித்திருக்கிறார். மதுரையில் ஜனவரி 3-ந் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அழகிரி.

அழகிரி ஆலோசனை
இதற்கான ஏற்பாடுகளை அழகிரி தரப்பு படுதீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் அதிருப்தியாளர்களாக இருப்பவர்களை மதுரை கூட்டத்துக்கு அழைத்துச் செல்வதில் படுதீவிரமாக இருக்கிறது அழகிரி தரப்பு. அழகிரி தரப்பின் இந்த முயற்சி எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது? என்பது ஜனவரி 3-ல் தெரிந்துவிடும்.

திமுக தீவிர கண்காணிப்பு
இருப்பினும் அழகிரி தரப்பு திமுகவில் யார் யாரை அணுகுகிறது? யாருடன் தொடர்பு கொள்கிறது? என ஒவ்வொரு நகர்வையும் மிக உன்னிப்பாக அந்த கட்சி மேலிடமும் மாவட்டங்களும் கவனித்து வருகின்றன. அதற்கேற்ப அதிருப்தியாளர்களுடன் அடுத்த கட்ட சமரச பேச்சுவார்த்தைகளை நடத்துவதிலும் திமுக தயார் நிலையில் இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications