உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு... விவசாயிகளை நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆதரவு
சென்னை: விளைநிலங்களுக்குள் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
வடமாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளாவிற்கு மின்சாரம் கொண்டு வருவதற்காக திருப்பூர், திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உயர் அழுத்தமின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இத்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கமணி உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் நடத்தியதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், இன்று காலை அவர்களை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து, இன்று சட்டசபையில் குரல் எழுப்பப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications