ஆறுதல் எங்கு சொன்னால் என்ன? விஜய்யை பாராட்ட வேண்டும்! ஓபிஎஸ் தடாலடி
சிவகங்கை: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகிறார்கள் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி அவர்களது நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். மேலும் அவர் மருது சகோதரர்கள் சிலைக்கு 6.5 கிலோ வெள்ளி கவசம் வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜய் கரூரில் உயிரிழந்தோரின் உறவினர்களை வரவழைத்து ஆறுதல் கூறியது வரவேற்கத்தக்கது. விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பற்றி கேட்கிறீர்கள்.
எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். ஆர்.பி. உதயகுமாரால்தான் அதிமுக இந்த நிலைமைக்கு சென்றுள்ளது. அதனால் அவரது கருத்துக்கு நான் பதிலளிப்பதில்லை. யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக அமைவது என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக கூட்டணி அமைப்போம். வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகிறார்கள்.
அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். திமுகவில் இருந்து எம்ஜிஆரை நீக்குவதற்கு அக்கட்சி பொதுக் குழு உறுப்பினர்கள் சிலர்தான் காரணம். தனக்கு நேர்ந்த நிலை வேறு யாருக்கும் வரக் கூடாது என்பதற்காகத்தான் தொண்டர்கள் மூலம் அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் விதிமுறையை கொண்டு வந்தார். ஆனால் தற்போது அந்த விதியையே மாற்றிவிட்டார்கள்.
மீண்டும் அந்த விதியை கொண்டு வரவே சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் சரியாகத்தான் நடக்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கரூரில் பாதிக்கப்பட்டோருக்கு விஜய் ஆறுதல் கூற அவர்களை மாமல்லபுரத்துக்கு வரவைத்திருப்பது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, "அந்த துயர சம்பவம் நடைபெற்று விட்டது. அங்கு சென்று ஆறுதல் சொன்னாலும் சரி, இங்கு கூட்டி வந்து சொன்னாலும் சரி. அனுதாபம் தெரிவித்ததைத்தான் நாம் பாராட்ட வேண்டுமே ஒழிய, அதற்கு உள்ளே நுழைந்து சில காரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பது சரியாக இருக்காது. இப்போது செய்திருப்பதே உண்மையிலேயே பாராட்டக் கூடியது." என்றார்.
அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கியுள்ள ஓபிஎஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகளை பெற்றார். எனினும் அவர் தோல்வி அடைந்தார். தற்போது ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து தினகரனும் விலகிவிட்டார். விரைவில் மெகா கூட்டணி அமையும் என ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications