திமுகவின் அடுத்த அதிரடி ரெடி... மார்ச் 11ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு?
சென்னை: திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் வேட்பாளர் பட்டியல் வரும் 11 ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐஜேகே, கொ.ம.தே.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை உள்ளன. இவர்களுக்கான இடங்கள் எத்தனை என்பது இறுதி செய்யப்பட்ட நிலையில் திமுக 25 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் 20 இடங்களில் மட்டுமே நேரடியாக தனது வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. மீதமுள்ள 5 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
தேர்தல் தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என்பது குறித்து இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. அதோடு விருப்பம்னு அளிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலையோடு முடிந்தது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் நேர்காணலுக்கான அழைப்பும் திமுக சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ள திமுகவின் பொது செயலாளர் அன்பழகன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் பரிந்துரைக்காக யாரையும் அழைத்து வரக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நேர்காணலை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்துவார் என்று குறிப்பிட்டுள்ள அன்பழகன் நேர்காணலில் கலந்து கொள்பவர்களிடம் அந்தந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள், தொகுதி நிலவரம் குறித்தும் ஆராய்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கலந்து கொள்பவர்கள் ஆதரவாளர்களையும் அழைத்து வரக்கூடாது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
அசிங்கமாகப் போய் விடும்.. துரைமுருகன், திமுக தலைமை மீது சுதீஷ் நேரடி பாய்ச்சல்!
9- ம் தேதி 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நேர்காணலும், 10 ம் தேதி காலை 9 மணிக்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நேர்காணலும் அறிவாலயத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்த நேர்காணலுக்குப் பிறகு 11 ம் தேதி காலை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னர் அல்லது பின்னர் அன்றையதினமே வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கூட்டணிகளை இறுதி செய்வதில் தாமதம் செய்து வந்த திமுக அணி இப்போது டாப் கியரில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுத்து வர அதிமுக அணி படாத பாடு படுவதால் கூட்டணியை இறுதி செய்வதில் அவர்களுக்கு தொகுதிகளை அடையாளம் காண்பதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தமிழக தேர்தல்களை பொருத்தமட்டில் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகதான் கூட்டணிகளை முதலில் முடிவு செய்யும் வேட்பாளர் அறிவிப்பும் அதிமுக தரப்பில் இருந்தே முதலில் வரும். அவர் இல்லாத நிலையில் முதலில் நடைபெறும் இந்த தேர்தலில் திமுக முந்தப் போவது குறிப்பிடத்தக்கது