திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து
சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மதிமுக இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் வரும் சட்டசபை தேர்தலில் 3 தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மதிமுக போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகள் குறைவாக போட்டியிடுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் வைகோ தலைமையில் திமுக மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

ஒப்பந்தம் கையெழுத்து
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் இன்று (11-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டில் 4 (நான்கு ) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும், அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி அளிக்கிறது
கடந்த தேர்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மதிமுக போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகள் குறைவாக போட்டியிடுகிறது. முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் வைகோ தலைமையில் திமுக மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
கடந்த முறை 6 தொகுதியில் போட்டியிட்ட மதிமுக 4-இல் வெற்றி பெற்றது. குறிப்பாக அரியலூர், மதுரை தெற்கு, சாத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய 4 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றிருந்தது.
12 தொகுதிகள் கேட்ட மதிமுக?
முன்னதாக வரும் சட்டசபை தேர்தலில் மதிமுக 12 தொகுதிகளையும், கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் கேட்டு திமுகவிடம் கோரிக்கை வைத்ததாக பேசப்பட்டது. கடந்த தேர்தல்களில் கூட்டணிக்குள் தங்கள் கட்சியின் நிலை மற்றும் வாக்கு செல்வாக்கை வைத்து இப்படி கோரிக்கை வைக்கப்பட்டதாம்.. ஆனால் இதற்கு திமுக தலைமை முடியவே முடியாது என சொல்லிவிட்டதாகவும் பேசப்பட்டது.
மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தான் 4 தொகுதிகளாவது தருவோம் என்றும் மதிமுகவிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று திமுக மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது.
திமுக கூட்டணி கட்சிகள்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்கள் கூட இல்லாத நிலையில் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. கடந்த முறையைவிட பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக, தொகுதி பங்கீடை நிறைவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி ஏணி சின்னத்திலேயே போட்டியிடப்போகிறது. இதேபோன்று மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை திமுக ஒதுக்கியது. உதயசூரியன் சின்னத்திலேயே இந்த கட்சி வரும் தேர்தலை சந்திக்க உள்ளது.












Click it and Unblock the Notifications