அப்போ கன்பார்ம்..? உயர்கிறது பஸ் கட்டணம்? அதிமுக ஆட்சியில் விலையே உயரவில்லையா? கே.என். நேரு ஆவேசம்!
பஸ் கட்டணம் விரைவில் உயர்த்தப்படுவதாக கே என் நேரு அறிவித்துள்ளார்
சென்னை: விரைவில் பேருந்து கட்டணம் உயர போவதாக திமுக அரசு அறிவித்துள்ளது, தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருபவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவார்.
திமுகவின் ஒவ்வொரு செயல்பாட்டையும் விமர்சித்தும், குற்றஞ்சாட்டியும் வரும் நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் சமீபத்தில் பேசினார்.
தமிழகத்தில் கரண்ட் பில் ஷாக் அடிக்கப்போகிறது.. பஸ் கட்டணம் உயரும்.. எச்சரிக்கும் எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிசாமி
அப்போது, "கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரி உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாது.. நிதி ஆதாரத்தை திரட்ட திமுக அரசிடம் எந்த திட்டமும் கிடையாது.. இதனால் விரைவில் போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம் உயர உள்ளது. அரசு ஊழியர்களையும், ஓய்வு பெற்றவர்களையும் நம்ப வைத்து திமுக அரசு கழுத்தை அறுத்துவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
நேரு விளக்கம்
இந்தநிலையில்தான், அமைச்சர் கேஎன் நேரு, ஏற்காட்டில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர், "நிதி ஆதாரத்தை திரட்ட சொத்து வரி, பொது போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தினால் அதனை செயல்படுத்தாதே என்று அதிமுக சொல்கிறது.. திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.. இப்போது 1 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக சொல்கிறார்கள்..
நிதி பற்றாக்குறை
கொரோனா பாதிப்பு, மழை வெள்ளம் பாதிப்பு போன்றவற்றை சமாளிக்கவே மிகப்பெரிய அளவில் நிதி தேவைப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி கொண்டிருக்கிறது.. கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது... ஆளுங்கட்சியை எதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சி குறை சொல்லி கொண்டிருக்கிறது..
பஸ் கட்டணம்
கடந்த 30 வருடத்தில் ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்துதான் வந்துள்ளது.. அதனால், அதிமுக ஆட்சி காலத்தில் எதுவுமே விலை ஏறவில்லையா என்ன? திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் பல மடங்கு ஜல்லி, சிமெண்ட் விலை உயர்ந்ததே? அதனால், பஸ் கட்டணம் உயர்வை பொறுத்தவரை மக்கள் பாதிக்காத வகையில் முதலமைச்சர் முடிவெடுப்பார்" என்று அமைச்சர் கே.என் நேரு கூறினார்.
அதிர்ச்சி
நேருவின் இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. தமிழகத்தில் நிதிபற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தெரிந்த விஷயம்தான்.. அதனால்தான் திமுக அறிவித்திருந்த பல்வேறு வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்ற முடியாத நிலைமையும் உள்ளது. இப்போதைக்கு தமிழக அரசுக்கு 6.53 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிகிறது..
சாமான்ய மக்கள்
எனவே, புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசிற்கு நிதிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவே, டாஸ்மாக் மதுபான பாட்டில்களின் விலையை 2 முறை தமிழக அரசு உயர்த்தியும் விட்டது.. இதுபோதாமல், ஆவின் பால் பொருட்களின் விலையும், சொத்து வரியையும் தமிழக அரசு உயர்த்தி அறிவித்துவிட்டது.. இப்போது பஸ் டிக்கெட் விலையையும் உயர்த்த போவதாக அறிவித்துள்ளதும், நிதி சூழல் என்றாலும், சாமான்ய மக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி வருகிறது.