2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்.. திமுகவில் பதவி பெறப்போகும் இளைஞர்கள்.. ஸ்டாலின் எடுத்த முடிவு!
சென்னை: திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவை தங்கள் பக்கம் கொண்டு வர, மாவட்டச் செயலாளர்களாக இளைஞரணியில் இருந்து நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் நம்பிக்கையாக இருந்த நிலையில், தவெகவின் எழுச்சி தமிழ்நாடு அரசியலை மாற்றி இருக்கிறது. அதிலும் முதல்வராக இருந்த ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வி அடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் தோல்விக்கு பொறுப்பேற்ற ஸ்டாலின், அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றங்களை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். அதேபோல் உழைக்க தயாராக இல்லாத மாவட்டச் செயலாளர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள் என்று நேரடியாகவும் கூறி இருக்கிறார்.
இதன் மூலமாக திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் இருக்கின்றன. சென்னையில் இரு மாவட்டச் செயலாளர்களுக்கு தலா 5 தொகுதிகள், 3 மாவட்டச் செயலாளர்களுக்கு தலா 2 தொகுதிகள் என்று 16 தொகுதிகளுக்கு 5 மாவட்டச் செயலாளர்கள் இருக்கின்றனர்.
அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் 4 முதல் 5 தொகுதிகள் வரை இருக்கின்றன. திமுகவில் தற்போது இருக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிக அதிகாரம் இருக்கிறது. இதனால் பலரும் குறுநில மன்னர்கள் போல் வலம் வருவதாக கட்சியினரே விமர்சித்து வருகின்றனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்த 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்கள் என்று திமுக திட்டமிட்டுள்ளது.
அதிலும் விஜய் அரசியல் வருகையால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்க ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார். இளைஞர்களுக்கு பதவிகளை கொடுப்பதன் மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளை மீண்டும் திமுக பக்கம் கொண்டு வர முடியும் என்று ஸ்டாலின் நம்புகிறார். இதில் மாவட்டச் செயலாளர்களாக பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
சோசியல் மீடியாவில் திமுக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. இனி வரும் காலங்களில் திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் ஐடி பொறுப்பாளர்களை நியமிப்பார்கள் என்று தெரிகிறது. இதன் மூலமாக திமுகவில் அமைப்பு ரீதியாகவும், பிரச்சார ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றம் நடக்க இருப்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications