நானெல்லாம் அங்க போக மாட்டேன்ம்பா...தலைவர்தான் எனக்கு...அனிதா ராதாகிருஷ்ணன்!!
சென்னை: ''திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக கழகத் தலைவர் தளபதி தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார். ஆகையால் என்னை கழகத்திலிருந்து தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவுகிறார் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. குக செல்வம் என்று செய்தி உலா வந்தது. தமிழக அரசியலே களை கட்டியது. டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். நேற்று பாஜகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து தூத்துக்குடி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனும் பாஜகவில் இணையலாம் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது.
அறிவாலயத்தில் இருந்து கு.க.செல்வத்திற்கு பறந்த தகவல்கள்... யார் அந்த கறுப்பு ஆடு..?
தளபதி முதல்வர்
இதையடுத்து, இன்று அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறான செய்திகளில் பரப்பி வருகின்றனர். அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக கழகத் தலைவர் தளபதி தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார்.
ஆகையால் என்னை கழகத்திலிருந்து தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இதுபோன்று விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டபப்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கந்த சஷ்டி கவசம்
டெல்லிக்கு சென்று இருந்த குக செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''திமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை இழுவுபடுத்தியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியுடன் உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும்'' என்று பேட்டி அளித்து இருந்தார்.
திமுகவில் இருக்காதீர்கள்
இந்த நிலையில், குக செல்வம் பாஜகவில் இணைந்தார். சென்னை, தி.நகரில் இருக்கும் பாஜகவின் கமலாலயம் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்து திமுகவினருக்கும் ஸ்டாலினுக்கும் அறைகூவல் விடுத்தார். ''இந்து மக்களுக்கு மதிப்பு கொடுங்கள் என்றால் என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வேன் என்று அறிவிப்பு வெளியிடுகிறீர்கள். திராணி இருந்தால் என்னை கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள். திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்டேன். இப்போது உதயநிதி சொல்வதை கேட்கும் நிலை திமுகவில் உள்ளது. 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் திமுகவில் இருக்காதீர்கள். எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம். அதனால் எல்லோரும் பாஜகவில் வந்து சேருங்கள்'' என்று அழைப்பு விடுத்து இருக்கிறார்.
உதயநிதி
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் கை ஓங்குகிறது என்பதால் மூத்த தலைவர்கள் விரக்தியில் இருக்கின்றனர் என்ற பேச்சு அடிபட்டது. இதற்கு முன்னதாக விபி துரைசாமி கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து இருந்தார். முதன் முறையாக தற்போது ஒரு சிட்டிங் திமுக எம்.எல்.ஏவான குக செல்வம் பாஜகவுக்கு தாவி இருக்கிறார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை குக செல்வம் கேட்டதாகவும், ஆனால், அந்தப் பொறுப்பு உதயநிதியின் ஆதரவாளரான சிற்றரசுக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் குக செல்வம் விரக்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது.
சரத்குமார்
இவரைத் தொடர்ந்து திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதா கிருஷ்ணன் பாஜக பக்கம் செல்லலாம் என்ற பேச்சுக்கு அவரே இன்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார். 2001ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இதையடுத்து, ஹவுசிங் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் 2011ல் திமுகவில் இணைந்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இடையிலேயே திமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுக சென்று அங்கிருந்து மீண்டும் திமுக வந்தார். 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சரத்குமாரை தோற்கடித்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவரது பேஸ்புக்கில் Father Of Modern Tamil Nadu என்று குறிப்பிட்டு கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.