திமுக எம்.எல்.ஏ. அணிவித்த பணமாலை! வாங்க மறுத்த கனிமொழி! கடைசியில் அந்த பணம் எங்கே போனது தெரியுமா?
கனிமொழி எம்.பி.க்கு பணமாலை அணிவித்து வரவேற்ற திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்.
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு தியாகராயர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி பணத்தால் உருவாக்கப்பட்ட மாலையை அணிவித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
பத்தாயிரம் ரூபாய் பணக்கட்டிலிருந்து 20 ரூபாய் சலவை நோட்டுக்களை மாலையாக கோர்த்து கனிமொழியை கவுரவிக்கும் வகையில் வரவேற்றார் கருணாநிதி எம்.எல்.ஏ.
இதனிடையே தனக்கு அணிவிக்கப்பட்ட பணமாலையை வீட்டுக்கு எடுத்துச்செல்ல மறுத்த கனிமொழி, அந்த பணத்தைக் கொண்டு ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்குமாறு கூறி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியிடமே பணமாலையை திருப்பிக் கொடுத்துவிட்டார்.
கலிங்கப்பட்டியில் நடைபெற்ற வளைகாப்பு விழா! அப்படியே வைகோ வீட்டுக்கு விசிட் அடித்த கனிமொழி எம்.பி.!
மொழிப்போர் தியாகிகள்
தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் திமுக சார்பில் நேற்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் சென்னை தியாகராயர் நகர் பாண்டிபஜாரில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கனிமொழி பேசினார். முன்னதாக அவரை வரவேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி கனிமொழிக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பண மாலையை அணிவித்தார்.
பண மாலை
எல்லாம் 20 ரூபாய் சலவை நோட்டுகளால் உருவாக்கப்பட்ட மாலை என்பது குறிப்பிடத்தக்கது. பண மாலையை பார்த்ததும் இதெல்லாம் எதற்கு என்பது போல் ஒரு ரியாக்ஷன் கொடுத்த கனிமொழி, அதனை தனது காருக்கு எடுத்துச் செல்லவேண்டாம் எனக் கூறி மீண்டும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதியிடமே கொடுத்துவிட்டார். தயவு செய்து திருப்பி வாங்கிக் கொள்ளுமாறு கூறிய கனிமொழி, இந்த பணத்தைக் கொண்டு ஏழை எளிய மாணவர்கள் படிக்க புத்தகங்கள் வாங்கிக் கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.
உற்சாகமிகு வரவேற்பு
கனிமொழி திடமாக வேண்டாம் எனக் கூறிவிட்டதால் அந்தப் பணத்தை கொண்டு ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதனிடையே கனிமொழியின் இந்த முடிவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. திமுக துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கனிமொழி கலந்துகொள்ளும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் இதே போன்ற உற்சாகமிகு வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேவையற்ற சர்ச்சை
தனக்கு அணிவிக்கப்பட்ட பணமாலையை மீண்டும் திருப்பிக் கொடுத்ததன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்திருக்கிறார் கனிமொழி எம்.பி. சால்வை, பொன்னாடை அணிவிப்பதையே முடிந்த வரை கட்சிக்காரர்களிடம் தவிர்க்க கூறி வரும் கனிமொழி, புத்தகங்களை மட்டுமே மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொள்கிறார்.