கட்சி நிர்வாகியின் கன்னத்தில் பளார் விட்ட திமுக எம்எல்ஏ! திருவள்ளூர் அருகே பொங்கல் விழாவில் பரபரப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே திமுக நிர்வாகி ஒருவரை அக்கட்சி எம்.எல்.ஏவே கன்னத்தில் பளார் விடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் முன்பே பொதுவெளியில் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ டிஜே கோவிந்தராஜன் நிர்வாகியை தாக்கியுள்ளார். உட்கட்சி பூசலால் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சி சார்பிலும் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை விழா நடந்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் டிரால்பாடி ஊராட்சியில் திமுக சார்பில், திராவிட பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ டிஜே கோவிந்தராஜனும் பங்கேற்று இருந்தார். கட்சியின் ஒன்றிய அவைத் தலைவர் முனிவேல் உள்பட பலரும் கலந்துகொண்டனர். அப்போது இவர்கள் இருவரும் பேசியபடியே வந்துகொண்டிருந்தனர். சாலையின் முன்னும் பின்னும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களும் உடன் நடந்து வந்துகொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எம்.எல்.ஏ கோவிந்தராஜன் கட்சி நிர்வாகி முனிவேலை கன்னத்தில் பளார் என அறைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஒரு நிமிடம் ஸ்டன் ஆகினர். எனினும் அவர் மீண்டும் மீண்டும் முனிவேலை தாக்கினார். இதையடுத்து அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. உட்கட்சி பூசல் காரணமாக அவரை எம்.எல்.ஏ தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரே பொதுவெளியில் கட்சி நிர்வாகியை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications