‘ஓசி பஸ்’ பேச்சு சர்ச்சை.. திமுகவை ரவுண்டு கட்டி விளாசிய நயினார் நாகேந்திரன்
சென்னை: திமுகவை சேர்ந்த ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், 'ஓசியில் பேருந்தில் பயணிக்கிறீர்கள்" என பெண்களைப் பார்த்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதில் காட்டாதது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகளிர் விடியல் பயண திட்டம்
2021ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதுமே கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான திட்டம், பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் விடியல் பயணத் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும். இதன் மூலம் பல கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
திமுக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
இந்நிலையில் தான் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ மகாராஜன் ‛விடியல் பயணம்' திட்டம் தொடர்பாக பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக ஆண்டிபட்டியில் மக்களிடம் பேசிய எம்.எல்.ஏ மகாராஜன், ‛‛நாங்க ஆட்சிக்கு வந்தாச்சினா.. என்னென்ன சொன்னோம்.. மக்களே கஷ்டப்படாமல் 4 மணி வரை வேலை செய்யுங்கள்.
அதன்பிறகு ஓசியாக பஸ்சில் போங்கனு சொன்னோம். இப்போ அதேமாதிரி போய் வறீங்களா? 3 ஆண்டுகளாக எவ்வளவு வேலை நடந்து இருக்கு.. இப்போது இந்த ரோடு போடப்போகிறோம். இதில் பஸ் விடப்போகிறோம். அதிலும் ஓசியாக தான் ஏறிப் போகப்போறீங்க.." என பேசியுள்ளார்.
'ஓசி' சர்ச்சை
திமுக எம்எல்ஏ மகாராஜனின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. கட்டணமின்றி அரசு திட்டத்தில் பயணிக்கும் பெண்களை ‛ஓசி' என்று திமுக எம்.எல்.ஏ மகாராஜன் கொச்சையாகப் பேசி எளிய மக்களை அவமதித்து உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், "கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று தி.மு.கவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
நயினார் நாகேந்திரன் கண்டனம்
இதற்கு முன் முன்னாள் தி.மு.க அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை "ஓசி" என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் "ரூ.1,000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க" என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் "அம்மாவுக்கும் ரூ.1,000, பொண்ணுக்கும் ரூ.1,000" என சபை நாகரிகமின்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
அதிகார மமதை
மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்! ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ தி.மு.க தலைவர்கள் காட்டாதது ஏன்?
அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் தி.மு.க அரசு இனியாவது திருந்தட்டும்!" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.












Click it and Unblock the Notifications