எம்எல்ஏ சார்.. நீங்க யாரா வேணும்னாலும் இருங்க.. செந்தில் பாலாஜியை பார்க்க அனுமதி மறுத்த சிஆர்பிஎப்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுமதிக்க வேண்டும் என்று கேட்ட திமுக எம்எல்ஏக்களிடம் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். எங்களுக்கு உங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆர்டர் இருந்தால் தான் அனுமதிப்போம் என துணை ராணுப்படையினர் மறுத்துவிட்டனர்
இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பபட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுததால் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளும் வெளியானது. இதனிடையே செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேட்டு, திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு. ரகுபதி, மா சுப்பிரமணியன், சேகர்பாபு உள்பட திமுகவினர் பலரும் ஓமந்தூரார் மருத்துவனைக்கு விரைந்து வந்து நலம் விசாரித்தார்கள்.

முதல்வர் முக ஸ்டாலினே நேரடியாக சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து மருத்துவமனையில் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் அறை முழுவதும் மத்திய துணை ராணுவப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரை பார்க்க திமுக எம்எல்ஏக்கள் பலரும் வந்த வண்ணம் உள்ளனர். திமுக அமைச்சர்கள் பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.
அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலரை தவிர யாரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க துணை ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. செந்தில் பாலாஜியை பார்க்க எம்எல்ஏக்கள் பரந்தாமன், இனிகோ இருதயராஜ் மற்றும் திமுகவினர் சிலரும் வந்தார்கள். அப்போது லிப்ட் அருகில் இருந்த துணை ராணுப்படை அதிகாரி, அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்று அனுமதி மறுத்தனர்.
எனினும் தொடர்ந்து எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தபடி இருந்தனர். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து எம்எல்ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அனுமதிக்கும்படி கேட்டபடியே இருந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் இறுதியாக யாரையும் அனுமதிக்ககூடாது என்று சொல்லிவிட்டார்கள். யாருக்கும் அனுமதி இல்லை. யாரையும் உள்ளே விட எனக்கு அனுமதி இல்லை என்று துணை ராணுவப்படை அதிகாரி கூறினார்.
அப்போது எம்எல்ஏ பரந்தாமன், தான் எம்எல்ஏ என்று கூறினார், அப்போது அங்கிருந்து துணை ராணுவப்படை அதிகாரி, நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். எங்களுக்கு உங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆர்டர் இருந்தால் தான் அனுமதிப்போம் என்றார். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க முடியாமல் அவர்கள் திரும்பி சென்றார்கள்
இதனிடைய அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். தற்போது சிகிச்சையில் செந்தில் பாலாஜி இருப்பதால் இனி கைதியாகவே சிகிச்சையை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு உடனடியாக மனுதாக்கலும் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications