முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காத திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்! துரைமுருகன் பேசியது என்ன?
சென்னை: திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

திமுக எம்.எல்.ஏ.க்கள்
நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் அமர வேண்டிய இடத்தில் நடுநாயகமாக அமைச்சர் துரைமுருகன் அமர்ந்து கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு ஓட்டுப் போடுவது என்பது பற்றி மட்டும் இந்தக் கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல்
மற்றபடி வேறு எந்த சப்ஜெக்ட் பற்றியும் பேசப்படவில்லை. முதல்முறை சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய பேர் இருப்பதால் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி கூடுதல் விளக்கத்துடன் பாடம் நடத்தப்பட்டது. முன்னதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவரிடமும் அறிவாலய ஊழியர்கள் லெட்ஜரில் கையெழுத்துப் பெற்றனர்.

முதல்வர் உடல்நிலை
அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காத முதல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த எம்.எல்.ஏ.க்கள் பலரும் முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நிலை பற்றி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டதை காண முடிந்தது.

அமைச்சர்கள்
இதேபோல் அமைச்சர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நலம் பற்றி தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டனர். இதனிடையே இன்று பிற்பகலுக்கு மேல் காவேரி மருத்துவமனையிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications