"யார் அந்த சார்?"! "இவன்தான் அந்த சார்" அதிமுக நிர்வாகியின் போட்டோவுடன் சட்டசபைக்கு வந்த திமுகவினர்
சென்னை: "இவன்தான் அந்த சார்" என்ற பதாகைகளுடன் சட்டசபைக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் அண்ணா நகரில் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரின் புகைப்படம் இருந்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து யார் அந்த சார் என்ற வாசகம் பொருத்திய பேட்ஜ்களை அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்துக் கொண்டு சட்டசபைக்கு வந்தனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலடியாக இவன்தான் அந்த சார் என்ற பதாகைகளுடன் சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் வருகை தந்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக எம்எல்ஏ பரந்தாமன் பேசுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தினமும் கருப்பு சட்டை அணிந்து வருகின்றனர். விடை தெரியாமல் இருந்த அதிமுகவினருக்கு விடை தெரிவிப்பதற்கே பதாகை ஏந்தி வந்துள்ளோம். திமுக உறுப்பினர்களாக நாங்கள் "இவன் தான் அந்த சார்" என்று காட்ட வருகை தந்துள்ளோம்.
ஆட்சியாளர்களும், விசாரணை அதிகாரிகள் மீது குறுக்கீடு செய்வது போல் அதிமுக நடவடிக்கை இருக்கிறது. விசாரணை விவரங்கள் குறித்து வெளியே பேசுவது சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரை தவிர மற்றொருவரும் இந்த விவகாரத்தில் தொடர்பில் இருப்பதாக அதிமுக சந்தேகிக்கிறது.
மாணவியை பலாத்காரம் செய்த போது அந்த ஞானசேகரன், யாரோ ஒருவரிடம் சார் என பேசியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இதனால் யார் அந்த சார் என்ற ஹேஷ்டேகை அதிமுகவினர் டிரென்டிங்கில் விட்டனர்.
மேலும் அதிமுகவினர் தங்கள் ஆர்ப்பாட்டங்களில் யார் அந்த சார் என கேள்வி எழுப்பியிருந்தனர். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் சட்டசபை தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த 2 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து கொண்டு சட்டசபைக்கு வந்தனர்.
மேலும் அவர்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து கொண்டு வந்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டசபைக்கு யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து கொண்டு வெள்ளை சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். கருப்பு சட்டை அணிந்து வந்தால் எடப்பாடி பழனிசாமி பேசுவதை காட்டாமல் புறக்கணிக்க வாய்ப்புள்ளதால் வெள்ளை சட்டை அணிந்து வந்ததாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக நிர்வாகி சுதாகர் கைது செய்யப்பட்ட நிலையில் இவன்தான் அந்த சார் என்ற வாசகத்துடன் திமுகவினர் சட்டசபைக்கு வந்தனர். சட்டசபை நுழைவு வாயிலில் நோட்டீஸை காண்பித்து கோஷமிட்டனர்.
திமுக உறுப்பினர்கள் காண்பித்த நோட்டீஸில் அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் சுதாகர், எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் யார் அந்த சார் , இவன்தான் அந்த சார் என வாசகம் எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு எழுந்தது.












Click it and Unblock the Notifications