பணிப்பெண் கொடுமை வழக்கு.. திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் நீதிமன்ற காவல் பிப்.,23 வரை நீட்டிப்பு
சென்னை: வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இவர்களது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், அவர்களின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 23ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டது.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் (திமுக) மகன் ஆண்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவரது வீட்டில் ஒரு பட்டியலின இளம்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளனர். இப்பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சார்ந்தவர். 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர். இப்படி இருக்கையில் ஆண்டோ மதிவாணன் வீட்டில் பணிக்கு வந்த இரண்டே நாட்களில் அவர் வேலை செட்டாகவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரை அனுப்பாமல் தொடர்ந்து வேலை வாங்கியுள்ளனர்.

இது குறித்து அப்பெண், "என்னை அடித்து துன்புறுத்தினார்கள். செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார்கள்" என்று கூறி உடலில் ஏற்பட்டுள்ள காயத்தை காண்பித்தார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மெர்லின் ஆகிய இருவரையும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, குற்றவாளிகளுடைய தண்டனையை உறுதி செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ரீதியான கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்திட வேண்டும். அவருடைய உயர்கல்விக்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து நிவாரணங்களையும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டு அமைப்புகளும் வலியுறுத்தின.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 25ம் தேதி தனிப்படை காவல்துறையினரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக ஜாமீன் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனு கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளனர். எம்எல்ஏ மகன் என்பதால், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் போலீஸார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறினார்.
மறுபுறம் பணிப்பெண் தரப்பில், "எஸ்.சி., எஸ்.டி பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை டிஎஸ்பி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில், ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும்.
வீட்டு பணியாட்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சட்டம் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. எனவே, போக்சோ பிரிவிலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர்" என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை 6ம் தேதி ஒத்தி வைத்தது. 6ம் தேதி தீர்ப்பை வாசித்த நீதிபதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். இந்நிலையில், எம்எல்ஏவின் மகன் மற்றும், மருமகளின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதையடுத்து நீதிபதி அல்லி இருவரின் நீதிமன்ற காவலையும் பிப்ரவரி 23ம் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக உத்தரவிட்டார். இதன்மூலம் அவர்கள் இருவரும் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications