மனப்பிறழ்வில் தவிக்கிறார் முதல்வர் எடப்பாடி... முரசொலி விமர்சனம்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை மாற்று முதல்வர் வந்துவிடுவாரோ என்ற மனப்பிறழ்வில் தவிப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியாகியுள்ள முரசொலி நாளிதழ் தலையங்கத்தில், திமுக ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட அணைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. 1967-ம் ஆண்டு கட்டப்பட்ட தும்பலஹள்ளி அணை தொடங்கி 2011-ல் கட்டப்பட்ட ஆனைவிழுந்தான் ஓடை அணை வரை பட்டியலிட்டு விவரிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சருக்கு பதில் தரும் வகையில் டி.ஆர்.பாலுவும், துரைமுருகனும் அறிக்கை மேல் அறிக்கை விட்ட நிலையில் இன்று கட்சி நாளிதழிலும் முதலமைச்சருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனி மற்றும் ஞ்சாயிற்றுக்கிழமைகளில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் நிலைகளை பாதுகாக்க திமுக என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு திமுக தரப்பில் இருந்து தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பதிலடி தரப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை தாண்டினால் சேலம், சேலத்தை தாண்டினால் சென்னை என்று வாழ்ந்து வரும் முதல்வருக்கு திமுக கட்டிய தடுப்பணைகளை பற்றி எப்படி தெரிந்திருக்கக்கூடும் என வினவப்பட்டுள்ளது. பதவியை தக்கவைக்க தூக்கமில்லாமல் முதல்வர் தவித்து வருவதாகவும், எந்த அமைச்சரும் தம்மை மதிப்பதில்லை என்பதை நினைத்து முதல்வர் மனம் வெம்பி உள்ளதாகவும் முரசொலி தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
முதலமைச்சரின் பேச்சுக்கள் தூக்கத்தில் பிதற்றுபவரை போல் உள்ளதாகவும், அவர் பேசாமல் இருப்பதே நல்லது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் பொத்திப்பொத்தி பாதுகாக்கும் முதல்வருக்கு அந்த துறையை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை என முரசொலி தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.