ரஜினிகாந்த் மீது முரசொலியில் கடும் விமர்சனம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, திமுக அதிகாரப்பூர்வ நாளிதழ், முரசொலியில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த நமது எம்ஜிஆர் பத்திரிகையிலும், அதையடுத்து நமது அம்மா பத்திரிகையிலும்தான் இப்படி அரசியல் எதிரிகளை மிகவும் கேலி செய்து கட்டுரை வெளியிடுவது வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால், முரசொலியும், இப்போது இறங்கியடிக்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதிதான், ரஜினி மீதான இந்த விமர்சனமாக பார்க்கப்படுகிறது.

சிலந்தி பகுதி
முரசொலி நாளிதழின் சிலந்தி என்ற பகுதியில், "ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப், மே... மே... மே..." என்ற தலைப்பில் 'ரஜினி' மற்றும் 'அப்பாவி ரசிகன்' நடுவேயான உரையாடல் என்ற பெயரில் கேலியாக கற்பனை கட்டுரை வடிக்கப்பட்டுள்ளது. எந்திரன் திரைப்படத்தில் 'கருப்பு ஆட்டை' கண்டு பிடிக்கும் இடத்தில் ரஜினி சொல்லும் டயலாக்தான் இந்த மே.. மே.. என்பது கவனிக்கத்தக்கது.

ரஜினிகாந்த் கருத்து
வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று ரஜினி கூறியதை குறிப்பிட்டு, அதற்கு ரசிகர் பதில் கூறுவதை போல இப்படி சொல்லியுள்ளது முரசொலி. "என்ன தலைவா கடைசியில் இப்படிக் காலை வாரி விடுகிறாய். உனக்கு கொடி பிடித்து கோஷம் போட்டு அப்பா, அம்மா பெயரைக் கூட எடுத்துவிட்டு உன் பெயரை எங்கள் பெயர்முன் இணைத்து ஊர் ஊராக தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து, உன் படம் ரிலீசாகும் நாளே எங்களுக்குத் திருநாள் என்று வான வேடிக்கை எல்லாம் நடத்திக் கொண்டாடிய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா?" என்பது போல பதில் சொல்லப்பட்டுள்ளது.

பல்வேறு விமர்சனங்கள்
இப்படியாக பல்வேறு விமர்சனங்கள் கட்டுரையில் முன் வைக்கப்பட்டுள்ளன. தமிழருவி மணியன், ரஜினியோடு இணைந்து செயல்படுவதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டம் உங்களை கைப்பாவையாக்கி ஆட வைத்துக்கொண்டுள்ளது என்ற விமர்சனமும் இதில் இடம் பெற்றுள்ளது.

ரஜினிகாந்த் ரசிகர்கள்
இதனிடையே ஸ்டாலின் உள்ளிட்டோரை ரஜினிகாந்த் விமர்சனம் செய்யாத நிலையில், ரஜினிகாந்த்தை முரசொலி விமர்சனம் செய்துள்ளது தவறானது என்று அவரது ரசிகர்கள் தங்களுக்கிடையேயான சமூக வலைத்தள குரூப்களில் கருத்து கூறி வருவதையும், சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுவதையும் பார்க்க முடிகிறது. அரசியலில் எதிர் முகாமில் செயல்படுவோரை விமர்சனம் செய்வது கட்சி பத்திரிகை பணி என்பது திமுக நெட்டிசன்கள் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications