நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரிடம் இதே மாதிரி நடந்துகொள்ள முடியுமா? அமித் ஷாவை வறுத்தெடுத்த திமுக!
சென்னை: தமிழிசை சௌந்தரராஜனிடம் நடந்து கொண்டது போன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து கொள்வாரா என்று தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது விழா மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கும் தொனியில் பேசினார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா கோபமாகப் பேசும் வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழிசை செளந்தரராஜனை அமித்ஷா கண்டிப்பது போன்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்தவர். அவரை இப்படி நடத்துவதை நாங்கள் மோசமாக உணர்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையோ இது போல் நடத்துவாரா? தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்துவதா?" என்று தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன் அண்மைக்காலமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அண்ணாமலையின் வார் ரூம் ஆட்களுக்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்தார் தமிழிசை.
இதனால், தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானது. தமிழிசைக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் திரள, அண்ணாமலை தரப்பினர் இந்த விஷயத்தை டெல்லி தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாகத்தான் தமிழிசையை பார்த்ததும் தன்னுடைய கோபத்தை நேரடியாகவே காட்டியிருக்கிறார் அமித் ஷா எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications