காலையே வந்த செய்தி.. பார்த்து ஆடிப்போன திமுக எம்பி ஜெகத்ரட்சகன்.. சைபர் கிரைமிற்கு பறந்த புகார்!
சென்னை: சமூக வலைதளங்களில் பாஜகவில் இணைய போவதாக அவதூறு பதிவுகள் வெளியான நிலையில். சைபர் கிரைமில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் லோக்சபா தொகுதி எம்பியும், புதுச்சேரி திமுக பொறுப்பாளருமான ஜெகத்ரட்சகன் குறித்து சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் ஒரு செய்தி வேகமாக பரவியது.
ஜெகத்ரட்சகன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் பதிவுகள் வெளியாகியது. ஆனால் அந்த பதிவுகள் முற்றிலும் தவறானது என்று திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.
தவறான செய்தி
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நேற்று( 8.03,.2021) முதல் சில சமூக வலைதளங்களில் சில தவறான செய்திகள் என்னைப்பற்றி பரப்பப்படுகிறது. எங்கள் கழகத்தலைவரும் குடும்பதலைவருமாகிய தளபதி அவர்களை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
தொகுதி பங்கீடு
இன்று மாலை (9.03.2021) கழகத் தலைவர் தளபதியின் கட்டளையை சிரமேற்கொண்டு புதுவை மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து எங்கள் தோழமைக் கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் கலந்து கொண்டிருந்தேன். என் மீது சமூக வலைதளங்களில் வருகின்றன தவறான செய்திகளை நம்ப வேண்டாம். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன்" இவ்வாறு கூறியுள்ளார்.
பாஜகவில் சேரவில்லை
இதனிடையே ஜெகத்ரட்சகள் ஆன்லைன் மூலம் சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார் அனுப்பி உள்ளார். அந்த புகாரில் பாஜகவில் நான் விரைவில் இணைய போவதாக எதிர்க்கட்சிகள் சிலர் திட்டமிட்டு எனது நற்பெயரை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
அவதூறு பதிவு
எனவே சமூக வலைதளங்களில் என் பெயரை தவறாக பயன்படுத்தி அவதூறு பதிவு செய்து வரும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளார் ஜெகத்ரட்சகன் எம்பி புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.