விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு! கண்டுகொள்ளாத மத்திய அரசு! அசராத கலாநிதி வீராசாமி எம்.பி.!
சென்னை: விமான நிலையங்களில் புறப்படுதல் மற்றும் வருகை குறித்த அறிவிப்புகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் அறிவிக்காமல் பிராந்திய மொழிகளிலும் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி 2வது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்த நிலையில் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்போது மீண்டும் அசராமல் அதே கோரிக்கையை வலியுறுத்தி மற்றொரு கடிதத்தை எழுதியுள்ளார் கலாநிதி வீராசாமி.
இது தொடர்பாக கடிதம் விவரம் வருமாறு;

விமான நிலைய அறிவிப்பு
விமான நிலையங்களில் புறப்படும் மற்றும் வருகை குறித்த அறிவிப்பு அல்லது முன் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தொடர்ந்து பிராந்திய மொழிகளில் விமான அறிவிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாத உள்ளூர் மக்களுக்க பிராந்திய மொழிகளில் அறிவிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.

கவலைக்குரிய விஷயம்.
இது குறித்து கடிதம் எழுதி 4 மாதங்களுக்கு மேலாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்தக் கடிதத்தை மீண்டும் எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். சென்னையில் இருந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல தனியார் விமான நிறுவனங்களில் நான் பயணம் செய்துள்ளேன், அங்கு தமிழ் மொழியிலும் அறிவிப்புகள் வெளியிடப்படுவதை கவனித்துள்ளேன். தனியார் விமான நிறுவனங்கள் விமான நிலையங்களில் பிராந்திய மொழியில் அறிவிப்புகளை வெளியிடும் போது, இந்திய விமான நிறுவனங்களால் ஏன் முடியாது என்பது கவலைக்குரிய விஷயம்.

ஆபத்தாக முடியும்
பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் தங்கள் பிராந்திய மொழிகளில் விமானத்தில் அறிவிப்புகளை வெளியிடுவதில்லை. ஏறக்குறைய அனைத்து அறிவிப்புகளும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே செய்யப்படுகின்றன, இது கன்னடம்/தமிழ்/மலையாளம் போன்ற மொழிகளை தாய்மொழியாக கொண்டுள்ள பல பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் இந்தி/ஆங்கிலம் புரிதல் நன்றாக இல்லாவிட்டால், அறிவிக்கப்படுவதை அவர்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியாது. உண்மையான அவசரகாலத்தில் இது ஆபத்தாக முடியும்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்திடுக
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, விமான நிலையம் மற்றும் விமானத்தில் அறிவிப்புக்கான ஏற்பாடுகளை விரைவில் இந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தொடர்ந்து பிராந்திய மொழிகளில் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications