கட்சி பதவியிலிருந்து திமுக எம்பி கல்யாண சுந்தரத்தின் பதவி பறிப்பு! துரைமுருகன் அதிரடி
சென்னை: திமுக எம்பி கல்யாணசுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதனால் தஞ்சை மாவட்ட திமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாண சுந்தரம் எம்பி அவர்களை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ (நாக்கியன்கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்) அவர்கள் தஞ்சை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்யாண சுந்தரம், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராக உள்ளார். மேலும் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட்டின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவர் கும்பகோணம் அருகே பம்பப்படையூர் கிராமம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர். கடந்த 1940 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு வயது 82. இவரது தந்தை சுந்தர்ராஜன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். 1952-ல் பம்பப்படையூரில் அப்போதைய முதல்வர் இராஜாஜி, காமராஜர், கக்கன், ஜி.கே.மூப்பனார் ஆகியோரை அழைத்து வந்து பூமிதான இயக்கத்திற்கு தனது சொந்த நிலத்தில் 2 ஏக்கரை தானமாக வழங்கியவர் இவரது தந்தை சுந்தர்ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர்ராஜனின் இரண்டாவது மகன் கல்யாணசுந்தரம். தந்தையைப் போலவே தன்னையும் பொது வாழ்விற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.
இவரது குடும்பம் அக்காலத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், குன்னியூர் சாம்பசிவம அய்யர், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற குடும்பங்களை ஒத்த பாரம்பரியமும், செல்வாக்கும் பெற்றது ஆகும்.
தனது 16-வது வயதில் கும்பகோணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1958-1959 ல் 10-ம் வகுப்பு படித்து வந்த கல்யாண சுந்தரம், தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை ஏற்று சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கிட தனது படிப்பைத் துறந்து அறிஞர் அண்ணா அறிவித்த மாணவர் போராட்டத்தை முன்னெடுத்து அரசியலில் அடியெடுத்து வைத்தார்.
மாணவர் போராட்டம் மூலம், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கல்யாணசுந்தரம் திமுகவின் ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியச் செயலாளராக 1972லிருந்து 1998 வரை ஐந்து முறை 27 வருடங்கள் தொடர்ந்து பொறுப்பு வகித்துள்ளார்.
ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியப் பெருந்தலைராக (யூனியன் சேர்மன்) பதவி வகித்தார். 1997-ம் ஆண்டு தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால்வள தலைவராக பதவி வகித்தார். 2006-ம் ஆண்டு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். முத்துச்செல்வன் என்ற மகன் தற்போது மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக உள்ளார்.












Click it and Unblock the Notifications