ஸ்டாலினின் செல்வாக்கை பார்த்து... வயிற்றெரிச்சலில் பிதற்றுகிறார் பொள்ளாச்சி ஜெயராமன் -ஆர்.எஸ்.பாரதி
சென்னை: மேற்கு மண்டலத்தில் மு.க.ஸ்டாலினுக்கு பெருகி வரும் செல்வாக்கை கண்டு பொள்ளாச்சி ஜெயராமன் வயிற்றெரிச்சலில் பிதற்றுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாலியல் சம்பவம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக உலுக்கிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இப்பாலியல் சம்பவத்தை குறித்து உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தவறியதால் இச்சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. கையிலெடுத்தது. இதுவே ஆளும் எடப்பாடி அரசுக்கு சம்மட்டி அடி என்பதை எடப்பாடியும், பொள்ளாச்சி ஜெயராமனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
குதிருக்குள் இல்லை
பொள்ளாச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. நிகழ்ச்சி ஒன்றில் பேசுகிறபோது "குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது", "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்கிற பழமொழிக்கு ஏற்ப பொள்ளாச்சி ஜெயராமன் வாய் சவடால் அளித்திருக்கிறார். கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களைப் பற்றி பொறுப்பற்ற முறையில் இவர் தொடர்ந்த வழக்கில், மு.க. ஸ்டாலின் (எழுத்துப் பூர்வமாக எந்தவிதான) இந்த வழக்கு குறித்து எதுவும் பேச மாட்டேன் என்று எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்பதை இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
வயிற்றெரிச்சல்
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல சி.பி.ஐ. விசாரணை என்றவுடன் மிரண்டு போயிருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் தவறான தகவல்களை பொது வெளியில் பேசியிருக்கிறார். மு.க. ஸ்டாலினை பதவி விலக சொல்வது என்பது, அவருக்கு மேற்கு மண்டலத்தில் பெருகிவரும் செல்வாக்கை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக பிதற்ற ஆரம்பித்து விட்டார்.
கொடூரமான சம்பவம்
சி.பி.ஐ. விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பிறகு தான் யார்? யார்? இந்த கொடூரமான சம்பவத்தில் பங்கு பெற்றவர் என்பது வெளிச்சத்திற்கு வரும். சி.பி.ஐ. விசாரணையில் குற்றம் புரிந்தவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தி.மு.க. சட்டத்துறை மூலமாக வழக்கை மேற்கொண்டு நடத்தி, உண்மை குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.