காமராஜர் மீது மரியாதை கொண்டவன்.. எனது பேச்சை விவாதப் பொருளாக்க வேண்டாம்.. திருச்சி சிவா விளக்கம்!
சென்னை: காமராஜர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான் என்று திமுக எம்பி திருச்சி சிவா விளக்கம் கொடுத்துள்ளார். மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல என்று கூறியுள்ள திருச்சி சிவா, தனது பேச்சினை யாரும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை பெரம்பலூர் பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திருச்சி சிவா எம்பி பேசுகையில், காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டன கூட்டங்களை நடத்தினார். ஆனால் காமராஜருக்கு ஏசி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதியை செய்ய உத்தரவிட்டார்.

கருணாநிதியின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன் அப்போதைய முதல்வரான கருணாநிதியின் கைகளை பிடித்து கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார். திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி சிவா காமராஜர் குறித்த பேச்சிற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமராஜரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள்.
கல்விக்கண் திறந்த காமராஜர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம். "குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!" என்று எழுதியவர் அண்ணா.
காமராஜரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய கருணாநிதி ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.
நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்! இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் வேண்டிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications