திமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு
திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது.
சென்னை: திமுக நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையில் நடந்த திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு ஏற்கனவே 97 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், இப்போது வெற்றி பெற்ற இந்த 13 தொகுதிகளையும் சேர்த்து, 110-ஆக பலம் கூடியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதனால் நாடாளுமன்றமே திரும்பி பார்க்கும் அளவுக்கு திமுகவின் பலம் கூடி உள்ளது.
மக்களவை திமுக கொறடாவாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தேர்வு #DMK #MKStalin #ARaja pic.twitter.com/uVn9ergVjH
— Oneindia Tamil (@thatsTamil) May 25, 2019
இந்த நிலையில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்களின் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள்கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு நன்றிதெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு:
இக்கூட்டத்தில் மக்களவை திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவை திமுக துணைத் தலைவராக கனிமொழி தேர்வானார். திமுக மக்களவை எம்.பிக்கள் குழுவின் கொறடாவாக ஆ. ராசா தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளராக எஸ்எஸ் பழனிமாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல, மாநிலங்களவை திமுக குழுத் தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டிகே.எஸ் இளங்கோவனும் தேர்வு செய்யப்பட்டனர்.