பலவீனமான பாஜக அரசு! செயல்பட வைக்க வேண்டியது நீங்கள் தான்- திமுக MP-க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது பலவீனமான பாஜக அரசு அமைந்துள்ளதாகவும் அதை நம்முடைய முழக்கங்களின் மூலமாகச் செயல்பட வைக்க வேண்டிய கடமை திமுக எம்பிக்களுக்கு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை நடந்தது.. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்ற அனைவரும் கலந்து கொண்டனர்.

lok sabha election 2024 dmk mk stalin politics

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திமுக இரண்டாவது முறையாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஸ்டாலின் பேச்சு: இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், "நாற்பதுக்கு நாற்பது என்று சொல்லி பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கினேன். நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியை அடைந்து விட்டோம். நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. 2004-ஆம் ஆண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் தலைவர் கருணாநிதி நமக்குப் பெற்றுத் தந்த வெற்றி இது அந்த வெற்றியை நாம் பெற்றுள்ளோம். இப்போது நாம் அடைந்துள்ள வெற்றிக்கு மிக முக்கியமான சிறப்பு உண்டு.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 39 தொகுதிகளைத்தான் கைப்பற்ற முடிந்தது. ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த தேர்தலில் அந்த ஒன்றையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது வென்றுவிட்டோம். இரண்டாவது தேர்தலில், முழுமையான வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும். இந்தச் சாதனை வரலாற்றில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்களுக்கு உள்ள பெருமை ஆகும்.

எம்பிக்கள்: நாடாளுமன்றத்தில் அதிக அனுபவம் கொண்ட டி.ஆ.பாலு முதல் முதல் முறை எம்.பி.யாகும் பலரும் இங்கு இருக்கிறீர்கள். மிகமிகக் குறைந்த வயதில் அருண் நேரு பெரம்பலூர் எம்.பி. ஆகி உள்ளார். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில் தான் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உங்களுக்கு இத்தகைய பெரிய வாய்ப்பை அளித்த கழகத்துக்கும் உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகமிக உண்மையாக இருங்கள். இதுதான் கழகத் தலைவர் என்கிற முறையில் நான் வைக்கும் வேண்டுகோள் ஆகும்.

உங்கள் அனைவருக்கும் நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கொள்கைக் குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி செல்லும் நீங்கள் என் பெயரையும் கழகத்தின் பெயரையும் காப்பாற்ற வேண்டும். ஒரு சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் லேசாக மாறி இருந்தால் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். அதே நேரத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையை மட்டுமல்ல ஆட்சி அமைக்கத் தேவையான அளவுக்குச் செல்வாக்கைக்கூட பாஜக அடையவில்லை.

பலவீனமான பாஜக அரசு: 370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் -400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240-க்கு இறங்கி விட்டது பாஜக. இந்தச் சூழலில் நாம் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும். போராட வேண்டும். ஏராளமான வாக்குறுதிகளை நாம் மக்கள் மன்றத்தில் வைத்தோம். அவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து அதனைச் செயல்பட வைக்க வேண்டும். பலவீனமான பாஜக அரசை நம்முடைய முழக்கங்களின் மூலமாகச் செயல்பட வைக்க வேண்டிய கடமை உங்கள் அனைவருக்கும் இருக்கிறது.

நமது கழகத்தின் தேர்தல் அறிக்கையைப் படியுங்கள். கழகத்தின் கடந்தகால நிலைப்பாடுகளை உணர்ந்து, தெரிந்து உரையாற்றுங்கள். நாடாளுமன்ற விவாதங்களைப் படியுங்கள். நாடாளுமன்றத்துக்குத் தவறாமல் போகவேண்டும். முழுமையாக இருந்து. அனைவர் பேச்சையும் கேளுங்கள். கடந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த முறை 234 உறுப்பினர்கள் இருக்கப் போகிறார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் பாஜகவுக்குச் சரிக்குச் சமமாக இந்தியாக் கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம். இந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உன்னிப்பாகக் கவனிப்பார்கள்: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கிறது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களது செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். அந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி நன்றி அறிவிப்புக்கான சுற்றுப்பயணத் திட்டத்தை விரைவில் தயார் செய்யுங்கள். அனைத்து பகுதிக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். சுற்றுப்பயண விவரத்தை விரைவில் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கான அலுவலகத்தைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தொகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைப்பேசி எண், மின்னஞ்சல் ஆகிய விவரங்களைத் தொகுதி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுங்கள். நீங்கள் தொகுதியில் இருக்கும் நாட்களில் உங்கள் அலுவலகங்களில் மக்களைச் சந்திக்கும் நேரம் எப்போது என ஒட்டப்பட வேண்டும். அந்த நேரத்தில் மக்கள் சந்திக்க வந்தால் உங்களைச் சந்திக்கும் நிலை இருக்க வேண்டும்.

வாய்ப்பு: உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு என்பது மிகமிக முக்கியமானது. பலத்த போட்டிகளுக்கு மத்தியில் உங்களுக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உங்கள் மீதும். என் மீதும், கழகம் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள். இவற்றின் மதிப்பு என்பது மதிப்பிட முடியாதது. மதிப்பிட முடியாத பொறுப்பு உங்கள் கரங்களுக்கு வந்திருக்கிறது. இதனைக் காப்பாற்றும் வகையில் மக்களைக் காக்கும் பணியை நீங்கள் அனைவரும் செய்து கழகத்துக்கும் எனக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+