ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக விஸ்வரூபம்- மேலும் 13 குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டது முரசொலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மேலும் 13 குற்றச்சாட்டுகளை தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பட்டியலிட்டுள்ளது.

முரசொலி நாளிதழில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நேற்று 25 குற்றச்சாட்டுகளுடன் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ள தலையங்கம்:

DMK Murasoli recalls PM Modis Protest against Gujarat Governor

- அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு மாறாக 9.1.2023 அன்று சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்டார். தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு, அவரால் ஒப்புதல் பெறப்பட்ட உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இதன்மூலம், மாநிலத்தின் மற்றும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை ஆளுநர் பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கினார்.

- முதலீடுகளை ஈர்க்க நான் வெளிநாடு சென்றிருந்த போது, 'வெளிநாடு சென்று அழைப்பதால் முதலீடுகள் வராது' என்று அவர் சொன்னது அவரது மலிவான அரசியலையே காட்டுகிறது.

- கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆதாரமற்ற மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

- சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும், பழிவாங்கும் நோக்கில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள்மீது மாநில அரசின் சமூக நலத்துறை 8 பொய்யான புகார்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் பேட்டி தருவது காவல் துறையின் விசாரணைக்கு இடையூறு செய்வது ஆகும்.

- குழந்தை திருமணம் செய்விக்கப்பட்ட சிறுமிகளிடம் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடந்ததாக பொய் தகவலை பரப்புகிறார். இப்படி ஒரு சாதாரண நபர் சொல்லி இருந்தால் அந்த நபர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ், காவல்துறையினர் நிச்சயம் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள் என்றும், குழந்தைத் திருமணம் என்ற கொடிய குற்றத்தில் இருந்து காப்பாற்றும் வகையில், கருத்துத் தெரிவிப்பதை நல்ல மனசாட்சி உள்ள யாராலும் அனுமதிக்க முடியாது.

- அமைச்சர்கள் நியமன விவகாரத்தில் 164(1) பிரிவுக்கு முரணாகவும், எனது ஆலோசனைக்கு முரணாகவும் அவர் செயல்படுகிறார்.

- அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஒரு உத்தரவை போடுகிறார். அதை அவரே வாபஸ் வாங்கிக் கொள்கிறார். இந்தியாவின் முன்னணி இதழ்கள் எல்லாம் அவரது நடவடிக்கையைக் கண்டித்து தலையங்கம் தீட்டி உள்ளன. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை சிறுமைப்படுத்திவிட்டார்.

- ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

- ஒன்றிய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் ஒன்றியத்தின் முகவராகத்தான் கருதமுடியும்.

- இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

- அரசியல் சாசனத்தின் 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதி மொழியை மீறி இருக்கிறார்.

- தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார்.

- ஆர்.என். ரவி உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர்.

நமது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் ஆர். என். ரவி அவர்கள் நீடிப்பது விரும்பத்தக்க தாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை இந்தியக் குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்" என்று சொல்லி இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

குஜராத் மாநில ஆளுநருக்கு எதிராக ஒரு காலத்தில் போர்க்கொடி தூக்கியவர்தான் இன்றைய பிரதமர் மோடி அவர்கள். அவர் அப்போது குஜராத் முதமைச்சராக இருந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைக் குஜராத் மாநில பெண் ஆளுநர் கமலா பெனிவால் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். பெண்களுக்கு எதிரியாகப் பெண் ஆளுநரே இருக்கிறார். ஒரு பெண்மணி குஜராத்தின் ஆளுநராக இருந்தும், பெண் களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது நமது துரதிருஷ்டமே" - என்று 2013 ஏப்ரல் 8-ம் தேதி டெல்லியில் நடந்த இந்தியத் தொழிலக சம்மேளனத்தின் (FICCI) கூட்டத்தில் பேசினார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அத்தகைய மோடி அவர்கள், இன்று ஆளுநர் ரவியை அடக்கி வைக்காமல் இன்னும் இருப்பது ஏன்?

மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 'மாநில அரசு முடிவெடுத்தால் அதனை ஆளுநர் ஏற்கவேண்டும்' என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 'ஆளுநர்கள் அரசியல் களத்தில் இறங்கக் கூடாது' என்றும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் என்றும், இறுதி அதிகாரம் அமைச்சரவைக்கே என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்து மீறும் ஆளுநர்களை தொடர்ந்து உச்சநீதிமன்றம் கண்டித்தே வருகிறது. ஆனால் அதனை ஆளுநர்கள்தான் புரிந்து கொள்வது இல்லை. பிரிட்டிஷ் ஆட்சி கவர்னராக, கவர்னர் ஜெனரலாக நினைத்துக் கொள்கிறார்கள்.

மாநில அமைச்சரவையின் சுருக்கெழுத்தாளரான ஆளுநர், முதலமைச்சரின் இந்தக் கடிதத்தை முழுமையாக படிக்க வேண்டும். ஆளுநர் வாசித்தால் ஒரு நிமிடம் கூட இந்தப் பதவியில் இருக்க மாட்டார். இவ்வாறு முரசொல் இநாளேட்டின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+