Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறிவிச்சாச்சு ராஜ்யசபா இடைத் தேர்தல்: இப்பவாவது திமுக முஸ்லிம் தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில் 1 இடத்துக்கு மட்டும் செப்டம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராஜ்யசபா தேர்தலிலாவது ஆளும் திமுகவின் சார்பில் மூத்த முஸ்லிம் தலைவர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த ஆண்டு 6 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் திமுகவின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றனர்.

அந்த தேர்தலின் போதே திமுகவில் முஸ்லிம் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சீனியர் என்ற அடிப்படையில் திருச்சி சிவா, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவர் என்பதால் என்.ஆர். இளங்கோ, அருந்ததியர் என்பதால் அந்தியூர் செல்வராஜ் ஆகியோரை திமுக நிறுத்தி எம்.பிக்களாக நிறுத்தியது.

திமுக முஸ்லிம் தலைவர்கள் ஆதங்கம்

திமுக முஸ்லிம் தலைவர்கள் ஆதங்கம்

திமுகவைப் பொறுத்தவரை அதன் வலிமையான வாக்கு வங்கி முஸ்லிம்கள்தான். அதனால்தான் பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றன. முஸ்லிம் கட்சிகளுக்கும் திமுக தலைமையிலான கூட்டணிதான் இயல்பான அணி தேர்வாகவும் இருந்து வருகிறது. அதனால் திமுக அணியில் முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய தொகுதி பங்கீடு உள்ளிட்ட வாய்ப்புகள் வழங்க வேண்டிய நிலையும் உள்ளது. திமுக தலைமை இப்படி செய்தாக வேண்டிய நெருக்கடியில் அக்கட்சியிலேயே நீண்டகாலம் பணியாற்றி வரும் மூத்த முஸ்லிம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதும் தொடருகிறது என்பது ஆதங்கம்.

தேர்தல்களில் வாய்ப்பு குறைப்பு

தேர்தல்களில் வாய்ப்பு குறைப்பு

2019 லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளை கணக்கு காட்டி திமுக தமது கட்சியின் சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. பின்னர் ராஜ்யசபா தேர்தலிலும் திமுக மூத்த முஸ்லிம் தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சட்டசபை தேர்தலிலும் கூட திமுக சார்பில் 3 முஸ்லிம்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். ஒருகாலத்தில் 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை திமுக தமது வேட்பாளர்களாக நிறுத்திய வரலாறும் இருக்கிறது. சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையிலாவது முஸ்லிம் தலைவர்களின் இந்த ஆதங்கம் களையப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

வாரிய பதவிகள் கூட

வாரிய பதவிகள் கூட

குறிப்பாக ஆகக் குறைந்தது வக்பு வாரியத்தின் தலைவர் பதவியாவது திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு தர வேண்டும் என்கிற அழுத்தம் அக்கட்சித் தலைமைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் எம்..அப்துல் ரஹ்மான் முன்னாள் எம்.பி, முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமத் மகள் பாத்திமா முசப்பர் , அதிமுக சார்பில் தமிழ்மகன் உசேன், சன்னி உலாமாக்கள் மற்றும் ஷ்யா உலாமாக்கள் பிரிவில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து அப்துல் ரஹ்மான் வக்பு வாரியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக வக்பு வாரியத் தலைவர் பதவியும் கூட திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு கிடைக்காமல் போனது. 1989-ல் திமுக ஆட்சியை பிடித்த போது முஸ்லிம் லீக் தலைவரான அப்து லத்தீப்-க்கு வக்பு வாரியத் தலைவர் பதவி கிடைத்தது. 1991-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அக்கட்சியின் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப்புக்கு அந்த பதவியை கொடுத்தது. 1996-ல் திமுக ஆட்சியில் மீண்டும் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் லத்தீப்புக்கே அந்த பதவி கொடுக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திமுக மூத்த முன்னோடி நாகூர் ஹனிபாவுக்கு வக்பு வாரியத் தலைவர் பதவி கிடைத்தது. 2006-ல் திமுக ஆட்சி அமைந்த போதும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஹைதர் அலிக்கும் பின்னர் கவிக்கோ அப்துரல் ரகுமானுக்கும் வக்பு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

ராஜ்யசபா இடைத்தேர்தல்

ராஜ்யசபா இடைத்தேர்தல்

இப்படி திமுகவின் கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்குதான் இனி வாய்ப்பு என்கிற நிலைப்பாட்டை திமுக தலைமை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதனால் திமுகவில் சேருவதை விட கூட்டணி கட்சிகளில் சேர்ந்தால்தான் இனி பதவி கிடைக்குமோ என்கிற நிலைக்கு புதியதாக திமுகவில் சேர நினைக்கும் முஸ்லிம்களிடையே ஒரு சிந்தனையை ஆழமாக விதைத்துவிட்டது திமுக. இந்த நிலையில்தான் தற்போது ஒரு ராஜ்யசபா காலி இடத்துக்கான தேர்தல் செப்டம்பர் 13-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த முகமதுஜான் காலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட காலி இடத்துக்குதான் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

திமுகவின் கோரிக்கை ஏற்பு

திமுகவின் கோரிக்கை ஏற்பு

தமிழகத்தில் மொத்தம் 3 ராஜ்யசபா காலி இடங்கள் உள்ளன. அதில் ஒன்று அதிமுகவின் முகமது ஜான் மறைவினால் ஏற்பட்ட காலி இடம்; அதிமுக எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்ற வைத்திலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட 2 வெற்றிடங்கள். இந்த 3 காலி இடங்களுக்கும் தனித்தனியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் திமுகவின் கோரிக்கை. அப்படி செய்தால்தான் திமுகவுக்கு மொத்தம் 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் கிடைக்கும் என்பது அக்கட்சியின் கணக்கு.

Recommended Video

    India-வின் அடுத்த பிரதமர் யார்? 40% சரிந்த Modi-ன் செல்வாக்கு
    இப்போதாவது முஸ்லிம்களுக்கு வாய்ப்பு?

    இப்போதாவது முஸ்லிம்களுக்கு வாய்ப்பு?

    தற்போது ராஜ்யசபா இடைத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதுவும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அதிமுகவின் முகமது ஜான் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான இடைத் தேர்தல் இது. இது இயல்பாகவே திமுகவில் மூத்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவருக்கான வாய்ப்பு கொடுப்பதற்கான சந்தர்ப்பமாகவும் இருக்கிறது. இந்த தருணத்திலாவது திமுக தமது கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்களில் ஒருவரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி செய்தால் பல ஆண்டுகளாக திமுகவில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லையே என்ற ஆதங்கத்துக்கு எளிதாகவே முடிவு கட்டலாம். இதைத் திமுக தலைமை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமா? என்பது அனைவரது எதிர்பார்ப்பு.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+