லோக்சபா தேர்தலுக்கு தயாராகுங்கள்.. அதிமுக நிர்வாகிகளுக்கு சொன்ன அட்வைஸ்.. ஜெயக்குமார் விளக்கம்
சென்னை: வாக்காளர் பட்டியலில் உள்ள அதிமுகவினர் வாக்குகளை குறி வைத்து திமுகவினர் நீக்கி வருவதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவிற்கு ஆதரவான வாக்குகள் தவறி விடாத வகையில் தொண்டர்கள் பணி செய்ய வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேயான உறவு முழுவதுமாக முறிந்து விட்டது. எந்த வித ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று முடிவு செய்தால்தான் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேசி முடிவு செய்ய முடியும். வேட்பாளர்கள் பணிகளை தொடங்க முடியும்.

திமுக லோக்சபா தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. வழக்கமாக அதிமுகதான் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கும். இந்த ஆண்டு திமுக முந்திக்கொண்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த அதிமுக, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக அதிமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலின் போது தொண்டர்கள் நிர்வாகிகள் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் வேட்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் வாக்குகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதிமுகவினர் வாக்குகளை குறிவைத்து நீக்கி வருவதாக திமுகவினர் மீது குற்றம் சாட்டிய ஜெயக்குமார், வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள், இடம் மாறி சென்றவர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளதாக தொவித்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை கண்காணித்து தேர்தல் ஆணையத்திற்கு சொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது
எம்ஜிஆர் பிறந்தநாள் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆற்றல் மிக்க தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை பட்டி தொட்டி எங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் எறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.
கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. தமிழ்நாடு போராட்ட களமாக மாறி விட்டது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. இது பற்றி மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications