ராகுல்காந்தி பதவி பறிப்பு! யாரோ கொடுத்த தவறான ஐடியா இது! 2 நாட்களில் எல்லாம் மாறும்! -ஆர்.எஸ்.பாரதி
சென்னை: யாரோ கொடுத்த தவறான ஆலோசனையின் பேரிலேயே ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறிக்கும் வகையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
இன்னும் 2 நாட்களில் முறைப்படி நீதிமன்றம் மூலம் தகுதிநீக்க அறிவிப்பை ராகுல் முறியடிப்பார் என சட்ட நுணுக்கங்களை குறிப்பிட்டு கூறுகிறார் ஆர்.எஸ்.பாரதி.

நாடு முழுவதும் அதிர்வலை
ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறிக்கும் வகையில் அவரை தகுதிநீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜகவின் சர்வாதிகார போக்கை மக்கள் நன்கு அறிந்து கொண்டுவிட்டார்கள் என்றும் நிச்சயம் 2024 தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடக் கற்பிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கவுண்டவுன் ஸ்டார்ட்
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யவே சட்டத்தில் இடமில்லை என்றும் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் தான் தகுதி நீக்கம் செய்ய முடியும் எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் தண்டனையை நீதிமன்றமே நிறுத்தி வைத்துள்ள நிலையில் இவ்வளவு அவசரமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது யாரோ கொடுத்த தவறான ஆலோசனையின் பேரில் தான் இருக்கும் எனக் கூறினார். மத்திய பாஜக அரசு வீட்டுக்குச் செல்ல கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டதையே இந்த நிகழ்வு காட்டுகிறது என்றார்.

அரசியல் மாற்றம்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக உளவுத்துறை மூலம் உணர்ந்த மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. ராகுலின் நடைபயணம் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகுதி நீக்கம் சலசலப்பு இன்றோ நாளையோ முடிவுக்கு வந்துவிடும் என்றும் 2 நாட்களில் முறைப்படி நீதிமன்றம் மூலம் தகுதிநீக்க அறிவிப்பை ராகுல் முறியடிப்பார் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்
ராகுல் காந்தி மீதான நடவடிக்கைகளால் அவர் மீதான இமேஜ் மக்கள் மத்தியில் உயர்ந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications