திமுக பெயரை சொல்லி வசூலில் ஈடுபட்ட தசரதன்... மடக்கிப்பிடித்த பொதுமக்கள்
சென்னை: மாதவரத்தை சேர்ந்த தசரதன் திமுகவில் வட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். இவர் மாதவரம் பகுதியில் கட்சி பெயரைக் கூறி அடிக்கடி வசூல் வேட்டை நடத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார் எனக் கூறப்படுகிறது.
ரெட்டேரி வில்லிவாக்கம் சாலையில் ஸ்ரீ வாரி சூப்பர் மார்க்கெட் என்ற கடை இரண்டு வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கடை உரிமையாளரிடம் தனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால், எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக மிரட்டியுள்ளார். ஆனால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரோ அதையெல்லாம் நாங்க பார்த்துக்கொள்கிறோம் பணம் தர முடியாது என கறாராக கூறிவிட்டார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு ஸ்ரீவாரி சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற திமுக வட்டதுணைச் செயலாளர் தசரதன், தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து அந்தக் கடைக்கு வெளியே பூக்கடை வைத்திருக்கும் முதியவர் தட்டிக்கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த தசரதன் அந்த முதியவரையும் கீழே தள்ளி சண்டையிட்டுள்ளார்.
மேலும், ஆபாச வார்த்தைகளால் அவர்களை திட்டியுள்ளார். இதனால் அங்கு கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே தசரதன் தப்ப முயன்றுள்ளார். ஆனால், பொதுமக்கள் விடுவதாக இல்லை மடக்கிப்பிடித்தனர்.
திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதை உணர்ந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள், அடாவடி பேர்வழிகளை கட்சியில் இணைக்க தலைமை தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு சில நிர்வாகிகள் தான் இது போன்ற நபர்களை கட்சியில் இணைத்து களங்கம் ஏற்படுத்துவதாகவும் திமுகவினர் வேதனை தெரிவிக்கின்றனர்.