மேயர்கள் மீது குவியும் புகார்கள்! கோபத்தில் கண் சிவந்த கட்சித் தலைமை! விரைவில் அதிர்ச்சி வைத்தியம்!
சென்னை: தமிழகம் முழுவதும் மேயர்கள் மீது கவுன்சிலர்களும், சொந்தக் கட்சியினரும் கட்டுக்கட்டாக புகார்கள் அனுப்பி வருவதை திமுக தலைமை மிக சீரியஸாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது.
தமிழகத்திலேயே நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது தான் சொந்தக் கட்சியினரே கட்சித் தலைமைக்கு அதிகம் புகார் அனுப்பியுள்ளனர். இதே போல் மதுரை மற்றும் கோவை மாநகராட்சி பெண் மேயர்களும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பிரச்சனைகள் வளர்ந்து வருவது தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறது திமுக தலைமை. இதனால் பல அதிரடி மாற்றங்களும், அறிவிப்புகளும் வரும் நாட்களில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
ஒப்பந்ததாரரிடம் நெல்லை மேயர் சரவணன் கமிஷன் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மதுரையில் மேயர் ரோபோடிக் போல் வேலை செய்கிறார் என்பதும் காலத்திற்கும், களத்திற்கும் ஏற்ற பணிகளை அவர் செய்ய வில்லை என்பது திமுகவினரின் குமுறலாக உள்ளது. கோவையில் ஆரம்பத்தில் அடக்கி வாசித்த மேயர் தரப்பு நாளடைவில் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டது.
இதற்கு உதாரணமாக கோவை மேயர் கல்பனா தம்பி மீது எழுந்துள்ள கொலைமிரட்டல் புகார் அமைந்துள்ளது. இதுமட்டுமல்ல இன்னும் பல மாநகராட்சிகளிலும் மேயர் -கவுன்சிலர்கள் இடையே முட்டல் மோதல் இருந்து வருகிறது. இதனால் ஒன்றிரண்டு மேயர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மற்ற மேயர்களின் எதேச்சதிகாரப் போக்கை மாற்ற முடியும் என யோசிக்கிறது திமுக தலைமை.
இதனால் ஜெயலலிதா பாணியில் ஒரு சில மாநகராட்சிகளில் மேயர் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications