கொரோனாவுக்கு முதல்வரை மருந்து கண்டுபிடிக்க சொல்லவில்லை... பரவாமல் தடுக்கச் சொல்கிறோம் -மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை யாரும் மருந்து கண்டுபிடிக்க சொல்லவில்லை என்றும் அது மேலும் பரவாமல் தடுக்கத்தான் சொல்கிறோம் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சரின் பேட்டி மனக்கவலைகளை தீர்ப்பதற்கு பதில் அதிகரிக்க வைக்கும் வகையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நோய் பரவல் அதிகம்

நோய் பரவல் அதிகம்

கொரோனா மறைந்தது என்ற செய்தி தான் முதலமைச்சருக்கு நல்ல பெயர் வாங்கித் தருமே தவிர; கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கைகளைக் குறைத்துக் காட்டுவதாலோ நல்ல பெயர் வாங்க முடியாது!" நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்குதான் ஒரே வழி என்று சொன்னது மாநில அரசு. ஆனால் ஐந்து கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்த பிறகும், நோய்ப் பரவல் அதிகமாகிக் கொண்டே போகிறது என்றால், இவர்கள் அமல்படுத்தியது பெயரளவுக்கான ஊரடங்கு என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

மருத்துவ உலகம் அதிர்ச்சி

மருத்துவ உலகம் அதிர்ச்சி

‘காய்ச்சல் வருகிறது, சளி வருகிறது, இதெல்லாம் வரத்தான் செய்யும், மனிதன் என்று இருந்தால் நோய் வரத்தான் செய்யும்' என்று நேற்றைய தினம் அவர் திருவாய் மலர்ந்துள்ளது, நாட்டு மக்களை மட்டுமல்ல; மருத்துவ உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா வைரசும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா? சாதாரண சளி, காய்ச்சலில் தான் 704 உயிரிழப்புகள் நடந்துள்ளதா? இன்னுமா இந்த வைரசின் தாக்கம் குறித்து அறியவில்லை!

மக்கள் மீது பழி

மக்கள் மீது பழி

கொரோனாவை மறைக்க முயற்சித்தார்கள். தடுப்பு நடவடிக்கையில் அக்கறை காட்டவில்லை. முதலில் விமானம் மூலமாகவும், ரயில் வழியாகவும் வந்திறங்கிய பயணிகள் மீது பழி போட்டார்கள்; பிறகு கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மீது பழி போட்டார்கள்; அதற்கடுத்து மக்கள் மீதே பழி சுமத்தினார்கள்; இப்போது இறைவன் தலையில் பழியையும், பாரத்தையும் ஏற்ற முயற்சி செய்துள்ளார்கள்.

வணங்க வேண்டும்

வணங்க வேண்டும்

இந்தக் கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலென்ஸ் ஓட்டுநர்கள், காவலர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கத்தையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அவர்களை வணங்க வேண்டும்.

முதல்வர் பதில் என்ன?

முதல்வர் பதில் என்ன?

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதனை அவரே மறுத்துவிட்டதாகவும், ஸ்டாலின் தான் அப்படிச் சொல்வதாகவும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அமைச்சருக்கு நோய்த்தொற்று இல்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதுதான். மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுநாள் அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் செய்தியை உறுதிப்படுத்திய பிறகு அவர் நலமடைய வேண்டி ‘ட்விட்டர்'செய்தி வெளியிட்டேன். அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல் திரு. பழனிசாமி மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களும் அமைச்சர் அன்பழகனுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று ‘ட்விட்' செய்திருந்தாரே அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

திரு. பழனிசாமி இன்னமும் ‘சேலம் யூனியன் பிரதேச முதலமைச்சரைப்'போலத்தான் நடந்து கொள்கிறாரே தவிர, தமிழக முதலமைச்சராக எப்போது தன்னை நினைக்கப் போகிறார்? 'கொரோனா என்பது புதிதாக வந்த நோய், அதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை' என்று திரும்பத் திரும்ப முதலமைச்சர் சொல்கிறார். அவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. மேலும் பரவாமல் தடுக்கத்தான் சொல்கிறோம்.

கொரோனா இல்லாத தமிழகம்

கொரோனா இல்லாத தமிழகம்

மக்கள் சொல்லும் ஆலோசனைகளை - மக்களின் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனைகளை - கேட்டு, பரிசீலித்து நடந்து, கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் என்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன். அவரது நேற்றைய பேட்டி மனக்கவலை அளிப்பதாக உள்ளது; தமிழக மக்களின் கவலைகளைத் தீர்த்துவைப்பதாக இல்லை!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+